
'உன் நண்பன் யார் என்று சொல்; நீ யார் என்று சொல்கிறேன்' என்பதைப்
போல, 'உங்களின் முன்மாதிரி மனிதர் யார்' என, ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி
மாணவ மாணவியர் சிலரிடம் கேட்டோம். 'என் தலைவர்' என இவர்கள் அடையாளம்
காட்டியவர்களில் அரசியல்வாதியும் இல்லை... நடிகரும் இல்லை!
'யாரும் செய்யாததை சாதிப்பவர்கள் மீது எனக்கு அபிமானம் உண்டு. 1992ல் இந்திய ராணுவ அதிகாரி பயிற்சியில் இணைந்த முதல் பெண் ப்ரியா ஜிங்கனே என் ஆதர்ச நாயகி. இன்று, நான் பாதுகாப்பு மற்றும் வியூகவியல் துறை மாணவியாக இருக்க அவர் மீதான ஈர்ப்பே காரணம்; அவரைப் போல் நிச்சயம் நானும் சாதிப்பேன்!'
சை.கிளாடிஸ் ஜினியர், பி.ஏ.,
'சிப்ஸ் கடை நடத்தும் அம்மாவை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது என் பெரும் கனவு. கிராமத்தில் வளர்ந்து, 'புரோ கபடி லீக்'கில் சாதித்து, வங்கி பணி பெற்ற தமிழக வீரர் அஜித்குமார் கபடியில் எனக்கு மானசீக வழிகாட்டி. பாரதியார் பல்கலை கபடி அணி கேப்டனாகிய நானும் அவரைப் போல சாதிப்பேன்!'
மா.கணேசன், எம்.ஏ.,
'அதிகாரம் மனிதனை மேம்படுத்தாது; மனிதநேயமே மேம்படுத்தும்' என, இறையன்பு ஐ.ஏ.எஸ்., தன் 'ஐ.ஏ.எஸ்., வெற்றி படிக்கட்டுகள்' புத்தகத்தில் சொல்லி இருப்பார். ' தேங்கிடாத கற்றல், சுடராக ஒளிரும் அறிவு, சமூகம் மீதான அன்பு, கனவுகளை அடைவதற்கான திட்டம்' என அவரைப் போல இயங்கி வெற்றி பெற எனக்கு பேராசை!'
சே.ஹேமலதா, பி.ஏ.,

