PUBLISHED ON : ஏப் 12, 2026

'கபடி... கபடி...'ன்னு பாட்டுப் பாடி நம்பிக்கையோட களமாடுற ஏழை
வீராங்கனையர், மத்திய, மாநில அரசுப் பணிகளுக்குப் போகணும்னு ஆசைப்படுறேன்.
என் ஆசைகள் நிறைவேறத் துவங்கியிருக்கு!'
யார் குரல்?
பெயர்: திவாகரன்
வயது: 35
அடையாளம்: கபடி பயிற்சியாளர்
திருநெல்வேலி வடமலை சமுத்திரம் இவரது ஊர்; இங்கே, இவரது கபடி பயிற்சி அகாடமியி ல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவியர் பயிற்சி பெறுகின்றனர். 'இவர்கள் வென்றுவரும் பரிசுத் தொகை அடுத்தடுத்த பயிற்சி களுக்கும், இவர்களது உணவுக்கும் பயன்படுகிறது' என்கிறார் திவாகரன்.
அன்று முதல் இன்று வரையிலான பயணம்?
கிராமத்து பள்ளி மாணவனாக மாவட்ட அளவில் கபடியில் சாதித்த எனக்கு, இந்திய அளவில் சாதிக்கவும், அதன்மூலம் கல்வி வாய்ப்புகள் பெறவும், அரசு வேலையில் இணையவும் ஆசை. ஆனால், வழிநடத்த ஆளில்லை.
கால ஓட்டத்தில் என் கனவுகள் கரைய உடற்கல்வி ஆசிரியரானேன். பின், 'கபடி பயிற்சியாளர்' ஆக தகுதி பெற்று ஓரளவு திருப்தி யுற்றேன். இன்று, தேசிய அளவில் சாதிக்கும் வகையில் கபடி வீராங்கனையரை உருவாக்கி வருகிறேன்.
பயிற்சி நிலத்தின் வாடகை , 'சிந்தடிக் மேட்' பயிற்சிக்காக, 2019ல் தன் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து தன் எண்ணத்தை நிறைவேற்றி இருக்கிறார் திவாகரன்.
ஆக... ஊர் மெச்சும் அளவிற்கு வாழ்க்கை; அப்படித்தானே?
இல்லை; 'உனக்கு இதில் என்ன லாபம்; ஏன் இந்த முட்டாள்தனம்' என ஊர் கேட்கிறது. தேசியப் போட்டிகளில் என் பிள்ளைகள் பெறும் வெற்றிகள் இக்கேள்விக்கு பதிலாகிறது.
வெளியூர் மாணவியர் தங்கி பயிற்சி பெற, மனைவியின் நகைகளை அடமானம் வைத்து தன் வீட்டின் ஒருபகுதியை விடுதியாக மாற்றியிருக்கும் திவாகரன், இவ்விடம் ஒரு நுாலகமும் அமைத்திருக்கிறார்.
பயிற்சி பெறுவோருக்கு சரியான நேரத்தில் ஊட்டச்சத்து உணவுகளை வழங்க செவிலி பயிற்சி முடித்து இருக்கும் இவரது மனைவி வித்யாவும், பீடி சுற்றியது போக எஞ்சிய நேரத்தில் தாய் மல்லிகாவும் உதவுகின்றனர்.
ஒரு பயிற்சியாளராக அடிக்கடி சொல்லும் அறிவுரை?
'சுயகட்டுப்பாடும், ஒழுக்கமுமே விளையாட்டிற்கான முதல் தகுதி. விளையாட்டை விளையாட்டாக பார்க்காதீர்கள்... வாழ்க்கையாக பாருங்கள்' என்று எப்போதும் சொல்கிறேன்.
'வடமலை சமுத்திரத்தில் கபடிக்காக 'உள்விளையாட்டு அரங்கம்' அமைக்க வேண்டும்' எனும் கனவோடு இருக்கும் இவருக்கு, அரசிடம் ஒரு கோரிக்கை உண்டு; அது...
'என்னிடம் பயிற்சி பெறும் பிள்ளைகளின் அடுத்தகட்ட சாதனைகளுக்கு உதவுங்கள் '
குறள் சொல்லும் குரல் : குறள்:613
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு
பொருள்: 'பிறர்க்கு உதவி செய்தல்' எனும் மேம்பட்ட நிலைமை, 'முயற்சி' என்று சொல்லப் படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கிறது.

