PUBLISHED ON : மே 17, 2026

விஜய் பதவியேற்பும் ஒரு துரோகமும்
பெரும் வழக்குகள் ஏதும் பதிவாகாத காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக விஜய் ராதா கிருஷ்ணன் பதவியேற்கச் செல்லும் மலைப் பாதையில் இருந்து துவங்குகிறது கதை. 'மலை இருந்தால் மழை உண்டு; மழை பெய்தால் கொலை உண்டு' என நம்மை பழக்கப்படுத்தி இருக்கும் மலையாள திரைக்கதை, இதில் அடுத்தடுத்து மூன்று கொலை, இடையில் ஒரு வங்கி கொள்ளை என நிகழ்த்த துப்பறியத் துவங்குகிறார் விஜய்!
எந்த கொலையும் நிகழ்வதற்கு முன்பான 'திடுக்' காட்சிகள் இல்லை; மூன்றாவது சடலம் கிடைக்கும் தருணம் இரவு என்பதால், கம்பளி பூச்சி கால்மூட்டு வரை ஏறி இறங்குவது போல் லேசாய் 'திகில்' உணர்வு; மற்றபடி, அந்த ஆறடி வெண் ணெய் சிற்பமான பெண் காவலர் துணையுடன் புலன் விசாரணை செய்து கொண்டே இருக்கிறார் அழகு விஜய்; அழகும், அறிவும் ததும்பும் படியான இக்காட்சி களில் எந்த ஒன்றும் திகட்டவில்லை.
'கொலையாளி யார்' என்பது கிடக்கட்டும்; 'கொலையானவர்கள் யார்' என்றே கண்டுபிடிக்க இயலாது சுற்றினாலும், ஒவ்வொரு விசாரணையின் முடிவிலும் ஒரு கதவு திறக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால், விஜய் தோளில் கைபோட்டபடி உடன் சுற்றுகிறது நம் ரசனை.
தமிழக முதல்வரின் உடை போல் இப்படைப்பிற்கான ஒளிப்பதிவு செம கச்சிதம்! 'கண்ணாமூச்சி விளையாட்டு போலத்தான் காதலும்' என்பார்களே... அது உண்மை; கண்ணாமூச்சியில் கண்டுபிடிக்கும் வரை போதை; காதலில் காதலை வெளிப் படுத்தும் வரை போதை; விஜயின் தாயை திடீரெனப் பார்த்ததும், விஜய் மீதான காதல் பொங்கி பிரவாகம் எடுப்பதை வெண்ணெய் சிற்பத்தின் கண்கள் வழி சொன்னவிதம்... 100 சதவீதம் கிளர்ச்சியூட்டும் கள்!
'குற்றவாளி யார்' என தன் குழுவினர் உதவியோடு விஜய் கண்டறியும் விதமும், துளியும் நம்மால் கணிக்க இயலாத 'க்ளைமாக்ஸ்' காட்சியும், 'தீயசக்தி'களை தகர்த்து 'துாயசக்தி' பெற்ற வெற்றி போல் மி ன்னுகிறது.
ஆக...
மே 4ல் இருந்து 'பிரேக்கிங் நியூஸ்' பார்ப்பவர்களுக்கு இது சுமாரான படம்
