PUBLISHED ON : ஆக 16, 2026

'காதலுக்கு ஜாதி, மதம் மட்டுமல்ல... வயதும் கிடையாது' என 'சமூக நீதி' போற்றுகிறான் இந்த விஸ்வநாத் மகன்
மருத்துவ காரணங்கள் அன்றி, வாடகைத்தாயை தேடிச்செல்ல 'பணத்திமிர்' காரணமாகும் நிகழ்வுகள் செய்தியாக வந்திருக்கிறது அல்லவா... அது இன்று திரைப்படம் ஆகியிருக்கிறது!
அவ்வப்போது மேடைகளில் கண்கலங்கும் சூர்யாவை பார்த்திராதவர்களுக்கு, இப்படைப்பில் நடிகர் சூர்யா புதுவிதமான நடிப்பில் மின்னுவார்; 'அப்பா - அம்மாதான் நமக்கு எல்லாமே' என்பதை 'டிவி' நிகழ்ச்சி, 'பட்டன் மாடல் செல்போன்' உதவியோடு சூர்யாவை சொல்ல வைக்கும் காட்சிகளில் 'சிக்ஸர்' அடித்திருக்கிறார் இயக்குனர்!
அம்மா நினைவால் சூர்யா அழும் காட்சியில், 'இவரு அடுத்த தேர்தல்ல நின்னாலும், இல்லேன்னாலும் என் ஓட்டு இவருக்குத்தான்' என 'ஜென் சி' கூட்டம் நிச்சயம் சத்தியம் செய்யும்!
அமெரிக்கவாழ் தமிழ் பெண்ணான 20 வயது நாயகியின் பணத்தேவைக்காக, அவரது கருப்பையின் வழி நாயகனின் வாரிசு பிறக்க, அக்குழந்தையின் மூலம் நாயகி நாயகனை நெருங்க, வயதை காரணம் காட்டி அவன் நல்லவனாக நடிக்க, கடைசியில் தன் உணர்ச்சிகளை 'கன்ட்ரோல்' பண்ண முடியாமல் 'எங்க அம்மா சிரிக்க காரணம் நீ; என் பிள்ளை பிறக்க காரணம் நீ; அவன் உயிரோடு வாழ காரணம் நீ' என அவன் முறுக்கு பிழிய...
இவற்றை விரல் சூப்பியபடி பார்த்துக் கொண்டிருக்கிறது பல் முளைக்காத அப்பிஞ்சு; விரல் சூப்பாமல் நாம்!
'விருந்து ருசித்ததா' எனும் கேள்விக்கு, 'பொரியலும் கூட்டும் சிறப்பாக இருந்தது' எனும் பதில் ஏற்புடையது எனில், இதில் ஒளிப்பதிவும், இசையும் சிறப்பாக இருக்கின்றன!
'மனுஷங்க பிரியுறது சண்டை போடுறதனால இல்லீங்க; சண்டைக்கு அப்புறம் எப்படி பேசுற துன்னு தெரியாததால' - இது, படத்தில் சூர்யா வசனம்; 'ஒரு படம் மொக்கையாகுறது நடிகரால இல்லீங்க; 'கதை'ன்னு கண்ட கன்றாவியையும் நம்மகிட்டே கொட்டுறதால!' - இது, நம் மனம்.
இக்கதையில் மாதத்தின் கடைசி மூன்று நாட்கள், 40 வயது கடந்த மகனுக்கு 'காம இச்சை' எழுகிறது; 'அது' தாயின் கவனத்திற்கு வருவது இப்படத்தில் நகைச்சுவை; இதை குடும்பத்தோடு அமர்ந்து உங்களால் ரசித்து கொண்டாட இயலுமெனில், நீங்கள் தாராளமாய் இந்த படைப்பை கொண்டாடி வரலாம்.
ஆக...
தவறை 'சரி' என்பதாக காட்டிவிடும் முயற்சி
