PUBLISHED ON : பிப் 15, 2026

உள்ளது உள்ளபடி கனவுலகத்தின் நிஜங்கள்
'வட்ட அமைப்பிலான அடுக்குமாடி குடியிருப்பில் மட்டுமே தனது 'திகில்' கதையை படமாக்க முடியும்' எனும் நிலையில் பிரபல இயக்குனர்; அப்படியான குடியிருப்பை தேடிப்பிடித்து அவரிடம் உதவியாளராக இணையும் அனந்தன்; அப்படத்தில் நடிக்க தனக்கொரு வாய்ப்பு கேட்கும் குடியிருப்பு உரிமையாளர் ஆஷான்; க்ளைமாக்ஸ் என்ன?
ஜிகர்தண்டா சித்தார்த், பாபி சிம்ஹாவை வைத்து படம் எடுத்ததைப் போல, இதில் அனந்தனுக்கு கமல்ஹாசனின் தீவிர ரசிகரான முதியவர் ஆஷானை இயக்கும் நிலைமை! 'ரீல்ஸ்' வீடியோக்களை கோர்வையாக்கி அதை 'சினிமா' என்று நம்பும் அனந்தன், 'கதகளி' கலைஞரான தனது தந்தையின் வாழ்வை படமாக்கும் இடத்துக்கு வந்து சேரும் வரை 'காமெடி' கைகொடுக்கிறது.
'இந்த கேமராவுலதான் பாகுபலி எடுத்தாங்க' என்று காட்டப்படும் கேமராவை, நடிப்பு ஆசை நிறைவேறாத ஆஷான் நோக்குகையில், ஒன்றை பார்ப்பதற்கும், தரிசிப்பதற்குமான வித்தியாசத்தை உணர்த்துகின்றன இந்திரன்ஸின் கண்கள்!
ஆஷானின் அரிதாரத்திற்குள் மறைந்திருக்கும் தன்னை திரையில் கண்டதும், பக்கத்து இருக்கையில் உள்ள அனந்தனின் கையை தந்தை பற்றிக் கொள்ளும் சாதாரண காட்சி தான்; ஆனாலும், நம் இமையோரம் நீர் திரள்கிறது. மலையளவு பழியுணர்ச்சி கொண்ட மனம், பழிதீர்க்கும் தருணத்தில் பனித்துளியாக கரைவதாக மற்றொரு காட்சி; இமை தாண்டுகிறது கண்ணீர்!
சைகையில் புல்லாங்குழல் இசைத்து குருவாயூர் அம்பலநடையில் கவர்ந்த ஜோமோன், இதில் சினிமா கனவுள்ள உதவி இயக்குனர்; 'தலையை பிரிட்ஜுக்குள் வைத்தால் தேவலை' எனும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் பரபரக்கும் உதவி இயக்குனர்களை கண்முன் நிறுத்தி கைத்தட்டல் பெறுகிறார்!
ஆசைகளை சுமக்கும் மனம், ஆறுதல் விரும்பும் மனம், அங்கீகாரம் தேடும் மனம் என பலவித மனங்களை தன் திரைக்கதை முழுக்க பரவ விட்டிருக்கிறார் இயக்குனர் ஜான்பால் ஜார்ஜ்; இவற்றில் சில நம் மனம் தொடுகின்றன.
ஆக...
'தன் கேரியரின் உச்சம் இதுவென்று கலைஞன் அல்ல... கலை சொல்ல வேண்டும்' என்கிறார் ஆஷான்

