PUBLISHED ON : பிப் 01, 2026

'பணம் தான் பேசும்' என்பதைச் சொல்லும் மவுன மொழி!
பணப்புழக் கம் நிறைந்த மும்பை நகரத்தில் ஒருவேளை உணவுக்கே அல்லல்படும் மகாதேவ் மற்றும் சதியால் கடனாளியான செல்வந்தன் போஸ்மேன். பணநெருக்கடியான சூழல், நல்லெண்ணம் கொண்ட இவர்களின் குணத்தை உரசிப் பார்க்க வென்றது பணமா... குணமா?
பேருந்தில் ஒருபுறம் ஜேப்படி திருடனின் முயற்சியை முறியடிக்கும் தீரம், மறுபுறம் பயணச்சீட்டு வாங்காமல் காசை மிச்சப்படுத்தும் 'பலே' ஆசாமி மகாதேவாக விஜய் சேதுபதி, நேர்மையை விற்காத செல்வந்தனாக அர்விந்த் சுவாமி; இருவரின் கண்களும் படம் நெடுகிலும் நேர்த்தியாக பேசிக் கொள்வதால், இவர்களது குரல் நம் செவிகளில் இடைவிடாது ஒலித்தபடியே இருக்கிறது!
இப்படியான மிகச் சிறந்த நடிப்பும், ஏ.ஆர்.ரஹ்மானின் உணர்ச்சிகரமான பின்னணி இசையும் இருந்தும் கூட, திரைக்கதை சுவாரஸ்யம் தரவில்லை. நேர்வழியை வலியுறுத்தும் சிறார் நீதிக்கதை போன்றதைச் சொல்ல, 133 நிமிடங்கள் எடுத்து நம் கழுத்தறுக்கிறது இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகரின் இயக்கம்.
'அரசு அலுவலகத்தில் லஞ்சம் எப்படி உரையாடும், வாக்காளர்களும் அரசியல்வாதியும் எப்படி ஓட்டுக்கு விலை பேசுவர்' என்பதை சித்தரிக்கும் காட்சிகளில் மட்டும், ஜன்னலின் மெல்லிய இடுக்குகளில் நுழையும் தென்றல் போல இயக்குனரின் கற்பனைத்திறன் எட்டிப் பார்க்கிறது.
இப்படைப்பு வழக்கமான திரை மொழியோடு வெளி ஆகி இருப்பின் ஏதேனும் ஒருவித தாக்கத்தை நமக்கு ஏற்படுத்தி இருக்க வாய்ப்புண்டு. மனதில் கனம் கூட்டும் மொழி மவு னம்; ஆனால், இப் படைப்பின் மவுனமோ காற்றில் அலை பாயும் சருகு.
ஆக...
கண்களால் வசனம் பேசியது நடிகர்கள்; வெங்காயம் உரித்த உணர்வைப் பெற்றது ரசிகர்கள்

