PUBLISHED ON : டிச 28, 2025

ஆண்டின் இறுதியில் ஒரு தரமான படம்!
ஒரு கொலை வழக்கில் ஐந்து ஆண்டுகளாக வேலுார் சிறையில் விசாரணை கைதியா ய் இருக்கும் இளைஞன் அப்துல் ரவூப். சிவகங்கை நீதிமன்றத்தில் அப்துலை ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும் காவலராக ஏட்டு கதிரவன். இவ்விருவர் வாழ்வின் கடந்தகால சம்பவங்களும், அப்பயணமும் சேர்ந்து அவர்களின் எதிர்கால விதியை தீர்மானித்தால்...?
'இக்கதை நிகழும் 2003ம் ஆண்டில், தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் நீல வண்ண பேருந்துகள் இருந்தனவா' எனும் சந்தேகத்தை நமக்குள் கிளப்பு வதைத் தவிர, சலிப்பையோ, களைப்பையோ இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி கிளப்பவில்லை. காவலராக இருந்து சினிமா இயக்குனரான தமிழின் கதையில் காவல்துறை சார்ந்த சித்தரிப்புகள் உண்மைக்கு பக்கத்தில் நிற்கின்றன.
'தனக்கு உண்டான குறைந்த பட்ச அதிகாரத்தை காவலர்கள் சரியாக பயன் படுத்தினால் நன்மைகள் நிகழ வாய்ப்புள்ளது' எனும் கதைக்கு, 'திக்... திக்' திரைக்கதை எழுதி இருக்கிறது தமிழ் - சுரேஷ் ராஜகுமாரி கூட்டணி. அப்துல் ரவூப்பும், கலையரசியும் வாழ்வில் கைகோர்க்க தத்தமது இறைவனை பிரார்த்திக் கையில், 'அவங்களை சேர்த்து வை கதிரவா' என நம்மை பதற வைத்ததில் திரைக்கதை ஜெயித்து விடுகிறது.
கும்கி அடையாளத்தை அழிக்க விக்ரம் பிரபுவுக்கு கதிரவன் உதவுவானா என்பது சந்தேகம்; ஆனால், எளியவர் கண்ணீரை துடைக்கும் கதிரவனுக்கு நிறைய காட்சிகளில் பாராட்டு கிடைக்கிறது. 'ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் முதலில் தீக்குளித்தது யார்' என்பதைச் சொல்வது உள்ளிட்ட நுண் அரசியல் பேசும் இடங்கள் கவனிக்க வைக்கின்றன.
'நல்லவர்கள் - கெட்டவர்கள்' என காவலர்களை திரையில் எப்படி காட்டினாலும், 'இப்படியுமா போலீஸ்ல இருப்பாங்க' என எழும் உணர்வு இதிலும் எழுகிறது. இறுதிவரை திரையில் நிகழும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடிவதால் திருப்தி கிடைக்கிறது.
ஆக..
நேசிக்கும் உள்ளத்தில் சிறைபட்டிருக்கும் அற்புதமான உணர்வு

