நாங்க என்ன சொல்றோம்னா...: தீர்த்தரூப தந்தேயவரிகே (கன்னடம்)
நாங்க என்ன சொல்றோம்னா...: தீர்த்தரூப தந்தேயவரிகே (கன்னடம்)
PUBLISHED ON : மார் 08, 2026

தனிமைக்கு இதம் தரும் ருசியான தேநீர்
விஸ்வநாத் உடனான தன் பழக்கத்தை சந்தேகிக்கும் மகனிடம், 'நான் சீதை இல்லை' என்கிற தாய் ஜானகி; 'இதனாலதான் அப்பா உன்னை விட்டுட்டு போயிருக்கலாம்' என்று பதிலுரைக்கும் மகன் பிருத்வி; 'என்னை மன்னிச்சிடு ஜானகி' என்று தன் குரலை கேசட்டில் பதிந்துவிட்டு காணாமல் போன கணவர் சிவசங்கர்; காயப்பட்ட இம்மனங்களை ஆற்றுப்படுத்த, 'விதி' என்கிற பெயரில் காலம் நிகழ்த்தும் விநோதங்களே கதை!
'அடுத்த கணம் என்னவென்று தெரியாததுதான் வாழ்க்கை' என்கிற எளிய தத்துவத்தை கேட்கையில், சிலர் கொட்டாவி விடலாம். ஆனால், மனிதனால் கணிக்க முடியாத வாழ்வின் அடுத்தடுத்த கணங்களை காலம் தீர்மானிப்பதை தன் கதை வழி நெகிழ்வாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராமேனஹள்ளி ஜெகந்நாத்.
லாரி முன் பாய்ந்து மரணிக்க நினைத்த ஜானகி, விஸ்வநாத்தின் காரில் அடிபடுவது; இறந்தவர்கள் பட்டியலில் தன் மனைவி பெயரை பார்த்து சிவசங்கர் பாதை மாறுவது; தன் குடும்பம் இப்படியாக இருக்க காரணமானவர் தன் காதலியின் தந்தைதான் என்பதை அறிய வேண்டிய நேரத்தில் பிருத்வி அறிந்திடாமல் இருப்பது என, கணங்களின் மகத்துவத்தை திரைக்கதை சொல்கையில், 'எளிய தத்துவம்' என்று கருதப்பட்டதின் பிரமாண்டம் புரிகிறது.
இரட்டை மாட்டு வண்டியில் ஒரு மாட்டின் இழுப்புக்கு இன்னொரு மாடு இசைவது போல, இத்திரைக் கதையுடன் நம் மனம் இசைந்து போகிறது. நிதானித்து நகரும் காட்சிகள் துவக்கத்தில் சலிப்பூட்டினாலும், 'பிருத்வி - ஜானகி - சிவசங்கர் வாழ்வை இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்' என்பதே நிஜம்.
வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி தொடர்ந்து பயணிக்கும் ஆவலை விதைப்பதால், நம் 150 நிமிடங்களை இப்படைப்பிடம் தாராளமாய் கொடுக்கலாம்.
ஆக...
'நேற்று போல் இன்று இல்லை; இன்று போல் நாளை இல்லை' என்பதன் ஒளிஓவியம் இது.

