
ராமலட்சுமி, மதுரை: எனக்கு 56 வயதான போதும் மாதவிடாய் வருகிறது. இவ்வளவு நாள் தொடர்வதால் ஆபத்தா?
பொதுவாக பெண்களுக்கு 45 முதல் 48 வயதில் 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நிற்கும் நிலை வரும். இப்போதைய காலகட்டத்தில் 52 வயது வரை கூட மாதவிடாய் வருகிறது. 56 வயதிலும் நார்மலாக ரெகுலராக வரும் பட்சத்தில் பயம் தேவையில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல் பருமன், தைராய்டு, குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் வந்திருந்தால் மருத்துவ சோதனை அவசியம். சுழற்சி நாட்களுக்கு முன்னதாக மாதவிடாய் வந்தால் கர்ப்பப்பை பரிசோதனை அவசியம்.
மெனோபாஸ் காலத்தில் 'ஈஸ்ட்ரஜன்' ஹார்மோன் சுரப்பது நின்று போவதால் எலும்பு தேய்மானம், தசை வலிமை குறைதல், சிறுநீர் பிரச்னை, இதய பாதிப்பு வரும் வாய்ப்பு அதிகம். வயோதிகமும் சேர்ந்து கொள்வதால் துாக்கமின்மை, மன அழுத்தம் இவையும் வரலாம். உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, சரியான துாக்கம், யோகா, தியானப்பயிற்சி தினமும் மேற்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். புரதம் நிறைந்த உணவு, பால், கால்சியம் மாத்திரை எடுப்பது நல்லது.
- டாக்டர் ரேவதி ஜானகிராம், மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர், மதுரை
வி.ரவிசந்திரன், ராமநாதபுரம்: எனக்கு 43 வயது. மார்க்கெட்டிங் துறையில் பணி புரிவதால் தினமும் டூவீலரில் 60 முதல் 80 கி.மீ., பயணிக்கிறேன். அடிக்கடி வயிற்று வலி வருகிறது. சிறுநீர் கழிக்கவும் சிரமமாக உள்ளது?
வெப்பமான இடத்தில் பணிபுரிபவர்களுக்கும், தண்ணீர் அதிகம் குடிக்காதவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் அடைப்பு ஏற்படும். இதன் காரணமாக வயிறு வலி வரும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலை குளிர்ச்சியாக வைக்க பழங்கள், இளநீர் எடுத்துக் கொள்ளலாம். சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்தால் உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். கல் அடைப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்த முடியும். அதுவே 10 மி.மீ., அளவை தாண்டினால் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும்.
- டாக்டர் முல்லைவேந்தன், உதவி மருத்துவ பேராசிரியர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
அருண்குமார், சிவகங்கை: கோடையில் உடலை பராமரிப்பது எப்படி?
கோடை காலத்தில் உடல்சூடு அதிகமாகும். அதைத் தடுக்க பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். உணவில் மோர், தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை சாத்துக்குடி, ஆரஞ்சு, தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப் பழம், வெண்பூசணி சாறு, பன்னீர் திராட்சை, வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம். பட்டினி விரதம் இருக்கக் கூடாது. ஐஸ் வாட்டர் குடிக்கக் கூடாது.
அதிக காரம், புளிப்பு, உப்பு கூடாது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இரவு படுக்கும் போது கை மற்றும் கால் பாதங்களில் தேங்காய் எண்ணெய் அல்லது நெய் தடவி மசாஜ் செய்து கொண்டு படுக்கலாம்.
டாக்டர் முகமது ரபி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை

