PUBLISHED ON : பிப் 02, 2026

கள்ளக்குறிச்சி மாவட்டம், கெடிலம் ஆற்றின் அருகில் உள்ளது திருநாவலூர். இந்த ஊரில் பக்த ஜனேஸ்வரர் (திருத்தொண்டீஸ்வரம்) சிவன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலைப் படைவீரர்களுடன் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் சோழ இளவரசர் ராசாதித்தன். இவர் முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகன்.
போர் இல்லாத காலங்களில் கோயில் புனரமைப்பு, ஏரி பராமரிப்புப் பணிகளைப் படைவீரர்கள் செய்வது வழக்கம். அந்த வகையில் பட்டத்து இளவரசர் தலைமையில், திருநாவலூர் கோயில் திருப்பணிகளில் படைவீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அந்த நேரத்தில் சோழ நாட்டின் மீது ராஷ்டிரகூட மன்னர்கள் படையெடுத்து வரும் செய்தியை அறிந்தார் இளவரசர். தன் படைகளுடன் தொண்டை நாட்டை நோக்கிச் சென்றார். அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் என்னும் இடத்தில் ராஷ்டிரகூடப் படைகளை எதிர்கொண்டார். பொ.யு. 949-ஆம் ஆண்டு இந்தப் போர் நடந்தது.
போரின்போது ராசாதித்தனின் தம்பிகள் கண்டராதித்தனும், அரிஞ்சய சோழனும் உடன் இருந்தனர். படைத் தளபதி வெள்ளங்குமரனும் இருந்தார். இவர்களிடமிருந்து ராசாதித்தனை சூழ்ச்சி செய்து பிரித்தது ராஷ்டிரகூடப் படை. முடிவில் கங்க மன்னன் பூதுகன் எய்த அம்பு, ராசாதித்தன் மார்பில் தைத்தது. யானையின் மீதிருந்தே உயிர் துறந்தார் இளவரசர். இதனால் இவர் 'யானைமேல் துஞ்சிய இளவரசர்' என்று அழைக்கப்பட்டார். துஞ்சிய என்பது இறந்த அல்லது உயிர் நீத்தவர் என்பது பொருள்.
ராஜேந்திர சோழனின் மூத்த புதல்வன் முதலாம் ராஜாதிராஜனும் 'யானைமேல் துஞ்சிய தேவர்' என்று அழைக்கப்படுகிறார். பொ.யு. 1054-இல் மேலைச் சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரனுடன் கொப்பம் (ஆந்திரம்) என்ற இடத்தில் போர் புரிந்தபோது, எதிரிகளின் அம்பு பட்டு யானையின் மீதிருந்தே வீரமரணம் அடைந்தார் ராஜாதிராஜன். எனினும் அவரின் தம்பி இரண்டாம் ராஜேந்திரன் படைகளுக்குத் தலைமை ஏற்று வழிநடத்தி, போரில் சாளுக்கியர்களை வென்றார்.

