சரித்திர சங்கமம்: மன்னர்களைத் தெய்வமாக்கிய கோயில்கள்
சரித்திர சங்கமம்: மன்னர்களைத் தெய்வமாக்கிய கோயில்கள்
PUBLISHED ON : மார் 02, 2026

அரசர், அரசிகள் மறைந்த பிறகு, அவர்களுக்குக் கோயில் எழுப்பும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. அவை, 'பள்ளிப்படை' கோயில்கள் என்று அழைக்கப்பட்டன. சைவ நெறிப்படி, மறைந்த அரசர் அல்லது அரசியின் அஸ்தியைப் புதைத்த இடத்தில், சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து, கோயில் எழுப்புவதே இதன் சிறப்பு.
இதற்குச் சிறந்த சான்றாகத் திகழ்வது, மாமன்னர் ராஜராஜ சோழன் எழுப்பிய கோயில். வேலூர் மாவட்டம் மேல்பாடியில், தன் தாத்தா அரிஞ்சய சோழன் மறைந்த (அன்றைய ஆற்றூர்) பிறகு, அந்த இடத்தில், ஒரு கற்றளிக்கோயிலை எழுப்பினார். 'ஆற்றூரில் துஞ்சிய தேவர்க்குப் பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீ ராஜராஜன் எடுப்பித்த கற்றளி' என்று அந்தக் கோயில் கல்வெட்டு கூறுகிறது.
அதே போல் ராஜேந்திர சோழன், தன் சிற்றன்னையான பஞ்சவன்மாதேவி மறைவிற்குப் பிறகு, 'பஞ்சவன் மாதேவீஸ்வரம்' என்ற கோயிலை எழுப்பினார். ராஜராஜசோழனின் மனைவியருள் ஒருவர் பஞ்சவன் மாதேவி. மூத்த தாரத்து மகனான ராஜேந்திரசோழன் மீது, பஞ்சவன்மாதேவி அளவற்ற பாசம் கொண்டிருந்தார்.
அந்தப் பாசத்தின் வெளிப்பாடாக, ராஜேந்திர சோழன் இந்தக் கோயிலை எழுப்பினார். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் இந்தக் கோயில் உள்ளது. அங்கு வழிபாட்டுக்காக ஓதுவார்கள், இசைக்கலைஞர்கள், கணக்கர்கள் எனப் பலரை நியமித்து, அவர்களுக்கான ஊதிய விவரங்களையும் கல்வெட்டுகளில் செதுக்கி வைத்தார் ராஜேந்திரன்.
சோழர்கள் மட்டுமன்றி, பாண்டியர்களும் இந்த வழக்கத்தைப் போற்றினர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில், பாண்டிய மன்னர் சுந்தரபாண்டியனுக்குப் பள்ளிப்படை கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு 'திருச்சுழியில் பள்ளிப்படை சுந்தரப் பாண்டிய ஈஸ்வரத்து மகாதேவர்' என்று பெயர். கோயிலில் சிவலிங்கம், நடராஜர், பிள்ளையார் உட்பட தாயார் சன்னதியும், கல்வெட்டுகளும் உள்ளன.
மரணத்திற்குப் பின்பு, முன்னோரைக் கடவுளாகப் பார்க்கும் மரபு நமக்கு உண்டு. அந்த மரபின் வெளிப்பாடுதான், இந்தப் பள்ளிப்படைக் கோயில்கள்.

