PUBLISHED ON : மார் 16, 2026

ஆங்கிலேயர்களின் பிடியில் இந்திய நிலப்பரப்பு இருந்த காலமது.
வில்லியம் ஹோய் (Dr. William Hoey) என்ற நிர்வாக அதிகாரி, 1894-ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் அருகே உள்ள சோகோரா (Sohgaura) கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அங்கே அவருக்கு ஒரு செப்புப் பட்டயம் கிடைத்தது.
பிராகிருத மொழியில், பிராமி எழுத்துகளில் பட்டயம் இருந்தது. 'பஞ்ச காலத்தில் நாட்டில் உள்ள அனைத்து தானியக் களஞ்சியங்களையும் திறக்க வேண்டும். அதிகாரிகள் யாரும் இதைத் தடுக்கக் கூடாது' என்ற செய்தி அதில் இருந்தது.
கூடவே, தானியக் களஞ்சியம், ஒரு பெரிய கரண்டி, மௌரியர்களின் சின்னமான பிறை நிலவு, மலை உள்ளிட்ட படங்களும் அதில் இருந்தன. பட்டயத்தை ஆய்வு செய்த போதுதான் அது, சந்திரகுப்த மௌரியரின் காலத்தைச் சேர்ந்தது என்று தெரிய வந்தது.
ஏன் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டார்?
சந்திரகுப்த மௌரியர், பொ.யு.மு. 32௧ முதல் 297 வரை இந்தியாவை ஆட்சி செய்த மாமன்னர். அவருடைய ஆட்சியின் கடைசி சில ஆண்டுகளில், நாட்டில் மழை பெய்யவில்லை. எங்கும் வறட்சி நிலவியது. உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் தவித்தனர்.
போர்க் காலத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டில் சேமிக்கப்பட்டிருந்த தானியக் களஞ்சியங்கள் நிரம்பி இருந்தன. மக்களின் உயிரை விட, போர் முக்கியமில்லை என்பதை உணர்ந்த மன்னர், தானியக் களஞ்சியங்களைத் திறக்க உத்தரவிட்டார்.
அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக் கூடாது, ஒரு குடிமகன் கூட பசியால் வாடக் கூடாது என்பதால், அப்படி ஒரு செய்தியை அதிகாரிகளுக்காக வெளியிட்டுள்ளார். இது, சந்திரகுப்தர் நாட்டு மக்களின் மீது வைத்திருந்த அன்பையும், அவரது நிர்வாகத் திறனையும் காட்டுகிறது.
செப்புப் பட்டயத்தில் மன்னரைப் பற்றிய புகழுரைகள் இல்லை. அவர் பரம்பரையைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை.
பட்டயத்தை மேலும் ஆய்வு செய்தபோதுதான், அது இந்தியாவின் மிகப் பழமையான செப்புப் பட்டயம் என்பது தெரிய வந்தது.

