PUBLISHED ON : பிப் 23, 2026

உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலைச் சிகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது 'ரூப்குண்ட்' (Roopkund)ஏரி.
1942-ஆம் ஆண்டு, வனப்பகுதியின் காப்பாளர் ஹரி கிஷன் மத்வால் (H.K.Madhwal) என்பவர் தற்செயலாக இந்த ஏரிக்குச் சென்றார். ஏரியின் கரைகளிலும், பனிக்கு அடியிலும் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் கிடப்பதைக் கண்டு அதிர்ந்தார்.
முதலில் இவை இரண்டாம் உலகப் போரின்போது ஊடுருவ முயன்ற ஜப்பானிய வீரர்களின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், கார்பன் டேட்டிங் சோதனைகள், இவை ஏறக்குறைய 1,200 ஆண்டுகள் பழமையானவை என்பதைத் தெரிவித்தன.
எலும்புக் கூடுகள் மரபணுச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை:
* இறந்தவர்கள் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். தவிரவும் 5,000 கி.மீ. தொலைவில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதியான கிரேக்கத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
* அனைவரும் ஒரே நேரத்தில் இறக்கவில்லை; பொ.யு. 800- முதல் 1800 வரையிலான வெவ்வேறு காலகட்டத்தில் தனித்தனியே இறந்திருக்க வேண்டும்.
* கத்தி அல்லது துப்பாக்கியால் ஏற்பட்ட காயங்கள் இல்லை. மாறாக மண்டை ஓடுகளில் விரிசல்கள் இருந்தன. அவை தலையில் விழுந்த ஒரு பொருளால் ஏற்பட்டவை.
* இவர்கள் ஆலங்கட்டி மழையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம். இமயமலையின் திறந்தவெளியில் தப்பிக்க வழியின்றி, ராட்சத பனிக்கட்டிகள் தாக்கியதில், அனைவரின் மண்டைகளும் பிளந்து உயிரிழந்திருக்க வேண்டும். இதில் ஆண்கள், பெண்களும், குழந்தைகளும் அடங்குவர்.
* கடும் பனி, எலும்புக்கூடுகளைச் சிதையாமல் பாதுகாத்துள்ளன. சில உடல்களில் தசைப்பகுதிகளும், தலைமுடிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
* இவர்கள் 'நந்தாதேவி ராஜ் ஜாட்' என்ற புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்களாக இருக்கலாம்.
தற்போதைய காலநிலை மாற்றத்தால் பனி உருகி, ஏரியின் அளவு சுருங்கி வருகிறது. சமூக விரோதிகள் அங்கிருக்கும் எலும்புக்கூடுகளைத் திருடிச் செல்வதால், இந்த வரலாற்றுத் தளம் சிதையும் அபாயத்தில் உள்ளது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட சில எலும்புக்கூடுகள் டேராடூனில் உள்ள இந்திய மானுடவியல் ஆய்வக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

