சரித்திர சங்கமம்: உயர்ந்த கோபுரத்தின் உன்னத வரலாறு
சரித்திர சங்கமம்: உயர்ந்த கோபுரத்தின் உன்னத வரலாறு
PUBLISHED ON : மே 11, 2026

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அமைந்திருக்கிறது அரங்கநாதர் கோயில்.
தருமவர்மன் என்னும் சங்ககால சோழ மன்னர் அரங்கநாதருக்குக் கோயில் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு இயற்கைச் சீற்றத்தால் மணல் மூடியிருந்த கோயிலை, கிள்ளிச் சோழன் என்பவர் மீட்டெடுத்ததாகப் புராண வரலாறு கூறுகிறது.
வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில், சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1277-1294) இந்தக் கோயிலின் விமானத்திற்குப் பொன் வேய்ந்ததால் 'பொன்வேய்ந்த பெருமாள்' என்று போற்றப்பட்டார். கோயிலுக்குத் துலாபாரமாக, நிறைய பொன்னும் பொருளும் கொடையாக வழங்கினார்.
கர்நாடகத்தின் ஹோய்சாள மன்னர் வீரசோமேஸ்வரர் (1235-1263), திருச்சி கண்ணனூர் (சமயபுரம்) பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தபோது, ஸ்ரீரங்கம் கோயிலைப் பாதுகாப்பதில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில்
கவனம் செலுத்தினார்.
14ஆம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களின் படையெடுப்பால் இரண்டு முறை ஸ்ரீரங்கம் பெரும் பாதிப்புக்குள்ளானது. 1310இல் மாலிக்காபூரின் படையெடுப்பாலும், 1323இல் உலுக்கான் படையெடுப்பாலும் கோயில் சேதமுற்றது. பெரும் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டது. உலுக்கான் படையெடுப்பின் போது, அரங்கநாதரைப் பாதுகாக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிர்நீத்தனர். கோயில் விக்ரகத்தைப் பாதுகாக்க, நாட்டின் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு சென்றனர்.
விஜயநகரப் பேரரசின் வருகைக்குப் பின்பே, கோயில் மீண்டும் பழைய நிலையை அடைந்தது.
மதுரையை ஆட்சி செய்த விஸ்வநாத நாயக்கர் முதல் விஜயரங்க சொக்கநாதர் வரை பல நாயக்க மன்னர்கள் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர்.
படத்தில் உள்ள பிரமாண்டமான ராஜகோபுரம், விஜயநகர மன்னர் அச்சுத தேவராயர் காலத்தில் தொடங்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக முழுமை பெறாமல், 'மொட்டை கோபுரம்' என்றே அழைக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு அஹோபில மடம், தமிழக அரசின் முயற்சியால், 236 அடி உயர கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இது ஆசியாவிலேயே மக்கள் பயன்பாட்டில் உள்ள மிகப் பெரிய கோயில் கோபுரமாகும். 7 பிரகாரங்களைக் கொண்ட இந்த ஸ்ரீரங்கம் கோயிலில், 21 கோபுரங்கள் இருக்கின்றன.
கோயிலில் 700க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் பராந்தக சோழனின் (907-953) கல்வெட்டு தான் மிகவும் பழைமையானது. பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள், தஞ்சை, மதுரை நாயக்க மன்னர்கள் ஆகியோருடைய கல்வெட்டுகள் உள்ளன. கோயிலில் ஆதுலர் சாலை எனப்படும் மருத்துவமனை செயல்பட்டதும் கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.
