PUBLISHED ON : மே 25, 2026

பொதுவாக அரசர்கள், கொடையாளர்கள் கோயிலுக்கு விளக்கெரிக்க நிலமோ, ஆடு, பசுக்களையோ தானமாக வழங்கிய செய்தி அனைவரும் அறிந்ததுதான். ஒரு சிலர், உடல்நிலை சரியாக வேண்டும் என்று வேண்டுதல் வைத்தும் நிலத்தைத் தானமாக அளிப்பார்கள்.
ஆனால், மல்லிகார்ஜுன ராயர் என்ற விஜயநகர மன்னர், தனக்கு வடநாட்டுப் படையெடுப்பின் போது, போரில் வெற்றி கிட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, 'உத்தேசரி கிளியூர் என்ற ஊரை ஸ்ரீரங்கம் கோயிலுக்குத் தானமாக வழங்கி இருக்கிறார்.
அதற்காகச் செப்பேடு ஒன்றையும் கோயிலுக்கு வழங்கியுள்ளார்.
மல்லிகார்ஜுன ராயரின் தந்தையான இரண்டாம் தேவ ராயரின் காலத்தில், விஜயநகரப் பேரரசு பரந்து விரிந்திருந்தது. ஒடிசா முதல் கன்னியாகுமரி வரையிலும் அவர்களின் ஆட்சி இருந்தது. தந்தையின் மறைவுக்குப்
பின் அரியணை ஏறிய மல்லிகார்ஜுன ராயர் (1446-1465), 'மூன்றாம் தேவ ராயர்' என்ற பட்டம் சூடிக்கொண்டார். இவர் காலத்தில்தான் பாமினி சுல்தான்கள், கலிங்கத்தின் கஜபதி மன்னர் போன்றோர் விஜயநகரத்துக்குத் தொல்லையாக இருந்தார்கள். அவர்களை வெற்றிக்கொள்ளத்தான், இந்த நிலக்கொடையை ராயர் கோயிலுக்கு வழங்கி இருக்கிறார்.
1462இல் மல்லிகார்ஜுன ராயர் 'உத்தேசரி கிளியூர்' கிராமத்தை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்குத் தானமாக வழங்கிய செப்பேடு, அந்தக் கோயிலின் உள்ளே அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. சமஸ்கிருத தேவநாகரி எழுத்தில் செப்பேடு எழுதப்பட்டுள்ளது.
