ADDED : நவ 17, 2023 01:30 PM
மகனின் தீய பழக்கத்தை கண்டு கவலைப்பட்டார் தொழிலதிபர். தனது தந்தையிடம் ஆலோசனை கேட்டார்.
விடுமுறை நாளில் இருவரும் என்னை பார்க்க வாருங்கள் என சொன்னார் தாத்தா. மூவரும் அவர்களுடைய பண்ணை காட்டிற்கு சென்றனர். பேரனிடம் ஒரு சிறிய மரக்கன்றுகளைக் காட்டி பிடுங்கச் சொன்னார். எளிதாக செய்தான். அதை போல் ஒரு செடியையும் காட்டினார்.
அதையும் கொஞ்சம் முயற்சி செய்து பிடுங்கினான் பேரன். இன்னும் கொஞ்ச துாரத்தில் இருந்த புதரைக் காட்டினார். முயற்சித்து கொஞ்ச நேரத்தில் வெளியே எடுத்தான். அடுத்தது ஒரு சிறிய மரத்தை காட்டினார், அதை வெளியே இழுக்க சிறுவன் மிகவும் போராட வேண்டியிருந்தது.
பேரனை பார்த்து “பழக்க வழக்கமும் அப்படித்தான்” என கூறினார். கெட்ட பழக்க வழக்கத்தை ஆரம்பத்திலே அகற்ற வேண்டும், அது பெரியதாக வளர்ந்து விட்டால் அதை அகற்றுவது கடினம் என சொன்னார் தாத்தா.
கெட்ட பழக்கங்களை ஆரம்பத்திலேயே கைவிடுவது நல்லது. இல்லையென்றால் அது பழக்கமுடையவரை பாழாக்கி விடும்.
