ADDED : நவ 24, 2023 09:48 AM
நாய்க்குட்டி விற்பனைக்கு என்ற பலகையைக் கண்டான் சிறுவன் ஒருவன். அந்த வீட்டுக்காரரிடம், 'நாய்க்குட்டி என்ன விலை' எனக் கேட்டான். '1000 ரூபாய்
முதல் 2000 ரூபாய் வரை' என்றார் அவர். ' நாயைப் பார்க்கலாமா' எனக் கேட்டான். வீட்டுக்காரர் விசிலடித்தார். உள்ளே இருந்து குட்டிகள் ஓடி வந்தன. அதில் ஒன்று மட்டும் தாமதமாக வந்தது.
அதைக் கவனித்த சிறுவன், ''ஏன்... என்னாச்சு. மெதுவாக வருகிறதே'' எனக்கேட்டான். 'இதன் கால்கள் சரியாக வளர்ச்சி பெறவில்லை. இது மெதுவாகத் தான் நடக்கும்'' என்றார் அவர். 'எனக்கு இந்த குட்டிதான் வேண்டும். இதையே வளர்க்க விரும்புகிறேன்'' என்றான். 'அப்படியானால் இலவசமாக பெற்றுக் கொள்' என்றார் வீட்டுக்காரர். ஏற்க மறுத்த அவன், 'இலவசமாகத் தர வேண்டாம். இதற்குரிய விலையை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால் இப்போது கொஞ்சம் தான் பணம் வைத்திருக்கிறேன். மீதியை அடுத்த மாதம் தருகிறேன்' என்றான்.
அதற்கு அவர், 'இந்த நாய்க்குட்டியால் ஒரு பயனுமில்லை. ஓடவோ, நடக்கவோ முடியாத இது உன்னுடன் விளையாடக்கூட முடியாது' என்றார்.
உடனே குனிந்து தன் பேண்ட்டை சற்று உயர்த்திக் காட்டியபடி இடதுகாலைக் காட்டினான். ' உடல்குறை கொண்ட என்னால் வேகமாக ஓடவோ, குதிக்கவோ முடியாது. என்னைப் போன்றவருக்கே இந்தக் குட்டியின் கஷ்டத்தை உணர முடியும்' என்றான். ''உன் வலியை உணர முடிந்தால் நீ உயிரோடு இருக்கிறாய். மற்றவர் வலியை உணர முடிந்தால் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்''.