
ஒரு குளிர்காலத்தில் எட்டு வயதான ஏஞ்சலும், அவளது தாயும் நடந்து சென்று கொண்டிருந்தனர். முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கியபடி அவர்களிடம் பிச்சை கேட்டார். சில நாணயங்களை, மகளிடம் கொடுத்து பிச்சை போட சொன்னார் தாய். அவள் 'தாத்தா...' என அழைத்து அவரது கையில் கொடுத்து விட்டு புன்னகையுடன் நடந்தாள்.
சிறிது துாரம் சென்றதும் அவர்களை யாரோ பின்தொடர்வது போல தோன்றியது. சட்டென திரும்பிப் பார்த்தனர். அந்த முதியவர் அவர்களுக்கு அருகில் நெருக்கமாக வந்து நின்றார். தாய் பதட்டத்துடன் குழந்தையை அணைத்து கொண்டார்.
'என்ன வேணும் உங்களுக்கு... எதுக்கு எங்களின் பின்னாடியே வர்றீங்க. போலீஸ கூப்பிடவா'என்று அதட்டலோடு கேட்டாள்.
'அம்மா... நான் என் பிள்ளைகளால் கைவிடப்பட்டவன். இங்க ஏழு வருஷத்துக்கு மேல பிச்சை எடுக்குறேன். இந்தக் குழந்தை வயசுல தான் இப்போது என் பேரன், பேத்திகள் இருக்கும். இது வரைக்கும் என்னை யாரும் தாத்தானு கூப்பிட்டதில்லை. இவள் கூப்பிட்டாளா அதான் கண் கலங்கிட்டேன். கொஞ்ச நேரம் அவகூட பேசணும்னு தோணுச்சு அதான் பின்னாடியே வந்துட்டேன். மன்னிச்சுருங்க மா...'என்று கூறினார். குழந்தையும் கண் கலங்கி அம்மாவை பார்த்தது.
'நீ தாத்தாகூட சிறிது நேரம் பேசிட்டு வாம்மா... நான் இங்கேயே இருக்கேன்'என்றாள் அம்மா.
'தாத்தா...'என குழந்தை அழைக்க இருவரும் கட்டிக் கொண்டனர். தன்னிடம் இருந்த சாக்லேட்டை கொடுத்தார்.
நம் அன்றாட வாழ்வில் பலர் அன்புக்காக ஏங்கி வருகின்றனர். அவர்களுக்கு நம் அன்பை பரிசாக கொடுப்போம். அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் அன்புதான் ஊற்று.