ADDED : ஜூன் 25, 2013 03:51 PM
இயேசு கிறிஸ்துவை பின்பற்றியவர்களில், பெரும்பாலானவர்கள் மீனவர்களாக இருந்தனர். அவர் அடிக்கடி கலிலேயா கடற்கரைப்பக்கம் செல்வார். படகுகளில் ஏறிச்செல்வதில் அவருக்கு அலாதிப்பிரியம் உண்டு.
ஒருமுறை அவர் சில மீனவர்களுடன் ஒரு படகில் பயணம் செய்து கொண்டிருந்தார். குறிப்பிட்ட தூரம் சென்றதும் உறங்கிவிட்டார். அப்போது, கடும்புயல் ஏற்பட்டது. அனுபவமிக்கவர்களாக இருந்தாலும், அந்த மீனவர்களால் புயலை சமாளிக்க முடியவில்லை.
படகு மூழ்கும் நிலைக்கு போய்விட்டது. அனைவருமே உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இந்த இக்கட்டான நிலையில் அவர்கள் இயேசு கிறிஸ்துவை எழுப்பி, ''போதகரே! நாங்கள் மடிந்து போவது பற்றி உமக்கு கவலையாய் இல்லையா?'' என்று கேட்டார்கள்.
உடனே அவர் எழுந்து காற்றை அதட்டி, கடலைப் பார்த்து, ''இரையாதே, அமைதலாயிரு!'' என்றார். அதன்பிறகு அவர்களிடம், ''எதற்காக இப்படி பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் போயிற்று?'' என கேட்டார்.
ஆண்டவரிடம் எல்லோருமே இப்படித்தான் இருக்கிறார்கள். தங்களுக்கு ஓர் ஆபத்து வந்துவிட்டால், ஆண்டவரை நோக்கி 'எங்களைக் காப்பாற்று' என அலறுகிறார்கள். நிச்சயமாக ஆண்டவர் அந்த துன்பத்தில் இருந்து எப்படியும் நம்மைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்கள். அதன் காரணமாக துன்பம் வந்த நேரத்தில் மட்டும் ஆண்டவரை நினைத்துவிட்டு, மற்ற நேரங்களில் மறந்து விடுகிறார்கள். நம் எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் இரவலாக தரப்பட்டிருக்கிறது. அந்த காலத்திற்குள் நாம் வாழ்கிறோம். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று நமக்கு தெரியாது. சீக்கிரத்திலோ, காலம் தாழ்த்தியோ மரணம் நிச்சயமாக நம்மை வாரிக்கொண்டு போய்விடும். அதன்பின் நம் தேவையை உணர நேரமிருக்காது.
எனவே, தேவன் நமக்கு அளித்திருக்கும் உயிர் வாழும் இந்த நேரத்தில் அவர் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.