ADDED : ஜூன் 05, 2014 05:16 PM
நெபந்தஸ் அழகான ஒரு தாவரம். இதன் மற்றொரு பெயர் ஜாடித் தாவரம். நம் நாட்டிலுள்ள அசாம் காடுகளில் உள்ள காரியா மலைகளில், இத்தாவரங்கள் அதிகம் காணப்படுகின்றன.
இலையின் மத்திய நரம்பில் இருந்து ஒரு நீண்ட பாகம் வளர்ச்சியடைந்து ஒரு ஜாடி போல காட்சியளிக்கும். இதற்கு ஒரு மூடியும் உண்டு. ஜாடியின் வாய் பாகத்தில் இனிப்பான திரவம் சுரக்கும். ஜாடியின் மூடியும் பார்ப்பரைக் கவரும் விதத்தில் வண்ணமயமாக இருக்கும். பூச்சிகள் இனிய திரவத்தை உண்ண ஜாடியின் வாயருகில் வந்தவுடன் இனிப்பான திரவத்தில் வழுக்கி,
அடிப்பாகத்தில் விழுந்து விடும். உடனே, மூடி தானாகவே மூடிக் கொள்ளும்.
பிறகு என்ன நடக்கும்? மாட்டிக் கொண்ட பூச்சி சிறிது நேரத்தில் இறந்து விடும். ஜாடிக்குள் சுரக்கும் திரவத்திற்கு செரிக்கும் சக்தி உண்டு. அது பூச்சியை செரித்து நெபந்தஸ் செடி தனக்கு உணவாக மாற்றி விடும்.
இதைப் போலவே, பாவமும் முதலில் இன்பமாகத் தெரிகிறது. அதிலே வழுக்கி விழுந்து விட்டால், நம் வாழ்க்கையை நாசமாக்கி விடும். கவர்ச்சி தான் சாத்தானின் கண்ணியாக இருக்கிறது. இன்றைய நாகரிகத்தில் வாலிபர்கள் அழகையும், கவர்ச்சியையும் விரும்பி அழகான புனிதமான வாழ்வை இழந்து நிற்கின்றனர்.
''ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறது போலும். அவளுக்கு(வேசியின்) பின்னே போனான்'' (நீதிமொழிகள் 7:23) என்று வேதம் கூறுகிறது.
பிசாசு நமக்கு தெரியாத படி, பல இடங்களில் அவனது வலையை விரித்து நம்மைப் பிடிக்கும் படி நமக்கு பிடித்த காரியங்களை நயம் காட்டி, காத்து நிற்கிறான்.
எனவே, நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். பிசாசின் வஞ்சவலை உங்களின் கல்லூரியிலோ, அலுவலகத்திலோ, இணைய தளம் என்னும் வலையிலோ எங்கும் இருக்கலாம். ஆகவே, ''ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்''
(மத்தேயு 24:4)