ADDED : ஜூன் 15, 2012 01:41 PM

''கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்'' (சங்.128:1)- பைபிள்
தமிழ்நாடு தேவ சங்க சபைகளின் செயலாளர் கங்கை. ஸ்டேன்லி மாணிக்கராஜ் தன்னுடைய பிரசங்க உரையில் ஒரு சம்பவத்தை கூறி விளக்கினார்.
ஒரு சபையில் வயதான போதகர் இருந்தார். அவருடைய பேச்சை மக்கள் புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது கண்டு, நிர்வாகக் குழுவினர் அந்த சபைக்கு வாலிப போதகரை நியமித்தார்கள். அவர் சிறந்த பிரசங்கியார். முதல் வாரத்தில், சபையில் அவருடைய தாலந்து (திறமை) வெளிப்பட்டது. ஜனங்களெல்லாரும் அவரது பிரசங்கத்தை புகழ்ந்து பேசினார்கள். அடுத்தவாரம் ஜனங்கள் எதிர்பார்ப்போடு வந்தனர். போதகரோ, கடந்த வார பிரசங்கத்தையே மீண்டும் பிரசங்கித்தார்.
இப்படியாக, நான்கு வாரங்கள் சபையில் தொடர்ந்து அதே பிரசங்கத்தை கொடுத்தார். ஜனங்கள் எரிச்சலாகி போதகரிடம் வந்து,
''போதகரே! உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டதா?'' என்று கேள்வி எழுப்பினார்கள்.
போதகர் சிரித்துக் கொண்டு, ''எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நான் அடுத்த வாரமும் இதே பிரசங்கத்தை தான் கொடுப்பேன்,'' என்றார்.
''ஏன்?'' என்று கேட்ட பொழுது, ''நான் பிரசங்கத்தில் சொன்ன அனைத்து காரியங்களைக் கேட்டு நீங்கள் என்று கீழ்ப்படிவீர்களோ, அன்று தான் நான் பிரசங்கத்தை மாற்றுவேன். அதுவரையிலும் நான் இதையே தான் பிரசங்கம் பண்ணுவேன்,'' என்று கூறி முடித்தார்.
''அன்பானவர்களே! இன்று நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். பிரசங்கத்தை கேட்கிறவர்களாகவா? அல்லது கேட்ட பிரசங்கத்தின் படி நடப்பவர்களாகவா? சிந்தித்து பாருங்கள்.