/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
இயற்கை வளத்தைப் பாதுகாப்போம்!
/
இயற்கை வளத்தைப் பாதுகாப்போம்!
ADDED : அக் 15, 2013 12:41 PM

இயேசு கிறிஸ்து உலகில் மனிதனாக அவதரித்து, ஊழியம் செய்த போது 38 உவமைக்கதைகள் மூலம் அறிவுரை வழங்கினார்.
ஒரு உவமைக் கதையில் இவ்வாறு கூறுகிறார். ''ஒரு மனுஷன் இருந்தான். அவன் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி அதைச் சுற்றிலும் வேலியடைத்து அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரர்களுக்கு அதைக் குத்தகையாக விட்டு புறதேசத்துக்குப் போயிருந்தான். (மத்தேயு 21:33)
ஆண்டவர் இந்த உலகைப் படைத்த போது, மனிதன் வாழ்வதற்கு ஏற்றவாறு மலைகளையும், சமுத்திரங்களையும், ஆறுகளையும் அவைகளில் வாழும் எண்ணற்ற மிருக ஜீவன்கள், பறவைகள், மீன்கள் உட்பட பல்வேறு உயிரினங்களையும் படைத்தார்.
நாம், இந்த உலகில் வாழ்வதற்கு குத்தகை எடுத்து வந்திருக்கிறோம். உலகை விட்டுச் செல்லும்போது எதையும் எடுத்துச் சொல்ல முடியாது. ஆனால், நம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்த உலகை அனைத்து விதத்திலும் பாழ்படுத்தி விடுகிறோம். கடவுள் அநேக தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும் அனுப்பினார். அப்போது வாழ்ந்தவர்கள், அவர்களை அடித்துக் கொன்று விட்டார்கள். நல்லவர்களால் திருத்த முடியாத போது,''கடவுள் தன் ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை தந்தருளி, என் குமாரனுக்காகவாவது அவர்கள் அஞ்சுவார்கள் என்று அனுப்பினார்.
ஆனால், நடந்தது என்ன? அவரையும் சிலுவையில்அறைந்து அவமானப்படுத்தி, கொலை செய்து சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள்.
வேதம் இவ்வாறு சொல்கிறது.
''திராட்சை தோட்டத்து எஜமான்.... அந்த கொடியரை கொடுமையாய் அழித்து(மத்தேயு 21: 40,41) வேறு ஒருவனுக்கு திராட்சைத் தோட்டத்தைக் கொடுப்பார் என்றார்''.
நம்மால் இந்த உலகின் இயற்கை வளத்தைக் காப்பாற்ற முடியாமல், இயற்கை வளத்தையும், வாழும் உயிரினங்களையும் அழித்து, கடவுளின் தூதர்களான தீர்க்கதரிசிகள், தூதுவர்கள், உபதேசியர்கள், மூப்பர்கள் போன்ற நல்லவர்களையும் அழித்தோம் என்றால் நிச்சயம் நாம் அழிக்கப்படுவோம். நம் இடம் வேறு ஒருவருக்குக் கொடுக்கப்படும்.
ஆண்டவர், நம்மை அழித்துவிட்டு வேறு சந்ததிக்குக் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இந்த உலகத்தை, இயற்கை வளத்தை பாதுகாத்து, நம் வருங்கால சந்ததி இயற்கை வளத் துடன் வாழ பாடுபடுவோம்.