ADDED : பிப் 10, 2015 04:16 PM

தேவாலயத்திற்கு ஒரு பரிசேயனும், ஆயக்காரனும் ஜெபம் செய்வதற்காக போனார்கள்.
பரிசேயன் ஆண்டவரிடம், ''தேவனே! நான் அநியாயக்காரன் அல்ல. நியாயப்படி நடக்கிறேன். வாரத்தில் இரண்டு தரம் உபவாசம் (விரதம்) இருக்கிறேன். என் சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பாகத்தை தேவகாரியத்திற்கு கொடுக்கிறேன். என்னை ஆசிர்வதியும்,'' என்று தன் பெருமையைப் பறைசாற்றி வணங்கினான்.
ஆயக்காரன் தன் மார்பிலே அடித்தபடியே. ''தேவனே! பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்,'' என்றான். இந்த இருவருடைய ஜெபத்தில் தேவன் ஆயக்காரனின் ஜெபத்தை அங்கீகரித்து அவனை நீதிமானாக்கினார்.
இந்த சம்பவத்தில் பரிசேயன் தன்னைக் குறித்துக் கூறிய அனைத்தும் உண்மையானது தான். அவனிடம் நல்ல குணங்கள் இருந்த போதிலும் தேவன் அவனை அங்கீகரிக்கவில்லை. காரணம், அவனுடைய ஜெபம் சுய புராணமாகவே இருந்தது. தன்னை நீதிமான் என நினைத்துக் கொண்டு, தன் சுயநீதியில் நம்பிக்கை வைத்து, தன்னை எப்போதும் எல்லோரும் பார்க்க வேண்டுமென ஒரு பெருமையான இருதயத்தோடு, மற்றவனை ஒப்பிட்டுப் பேசினான். அது மட்டுமல்ல! தன் உதட்டளவில் தான் அவன் தேவனிடம் பிரார்த்தித்தான். ஆகவே, இவனுடைய ஜெபத்தை தேவன் அங்கீகரிக்கவில்லை.
ஆயக்காரனோ பரிசேயனைப் போல சுய பெருமையோடு ஜெபம் செய்யாமல் தன்னை மிகவும் தாழ்த்தி பாவங்களுக்காக மனம் வருந்தினான். துன்மார்க்கன், பாவி என்று தன்னைப் பற்றி ஒப்புக் கொண்டு, குற்ற உணர்வோடு நின்றான். பரிசேயனைப் போல அவன் நீண்ட நேரம் ஜெபிக்கவில்லை. தேவனிடத்தில் கிருபையை மட்டுமே கேட்டான்.
இன்றைக்குப் பலரும் பரிசேயனைப் போல, சாதுர்யமான வார்த்தைகளால் பெருமையோடு ஜெபிக்கிறார்கள். இருதயத்தில் பெருமையுள்ளவனைக் கர்த்தர் ஏற்பதில்லை. ஆனால், இருதயம் நொறுங்கிப் போனவனை அவர் நோக்குகிறார். ஆயக்காரனுடைய தாழ்மையான உள்ளத்துடன் கூடிய ஜெபத்தை கர்த்தர் அங்கீகரித்து நீதிமானாக்கினார்.
தன்னைத் தான் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். இது தான் இயேசுவின் உபதேசம்.
பரிசேயன் பாவம் செய்யாதவன் தான். ஆனாலும், அவனுடைய பெருமை அவனை நீதிமானாக மாற தடை செய்தது. ஆகவே, பெருமை வேண்டாம். தேவ கிருபை ஒன்றே போதும் என்ற உறுதியோடு ஜெபிக்க பழகிக் கொள்வோம்.