/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
அழைப்பு வரும்! காத்திருப்போம்!
/
அழைப்பு வரும்! காத்திருப்போம்!
ADDED : ஜூலை 10, 2014 02:09 PM

எரிகோ நகருக்கு வந்த இயேசுகிறிஸ்துவைக்க காண பலரும் காத்திருந்தனர். அவரைத் தேவனின் குமாரன் என நம்பியவர்களின் கூட்டம் அது. அந்தக் கூட்டத்தில் பர்திமேயு என்ற பார்வையற்ற பிச்சைக்காரனும் இருந்தான்.
அவன் தெருவோரமாக அமர்ந்து, ''இயேசுவே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும்'' என்று விடாமல் சொல்லிக் கொண்டிருந்தான். இயேசு வந்துவிட்டார். கூட்டம் நெருக்கியடித்தது. அப்போது, இயேசு அந்த பிச்சைக்காரனை அழைத்து வரச்சொன்னார். உடனே சிலர் அவனிடம் சென்று, 'திடம்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார்' என்றனர்.
அந்த பிச்சைக்காரன், ஆண்டவரின் கவனம் தன் மேல் விழுந்து விட்டதைப் புரிந்து கொண்டான்.
விசுவாசமும் நம்பிக்கையும் மிக்கவனாய், தன் உடலில் போர்த்தியிருந்த அங்கவஸ்திரத்தை வீசி எறிந்து விட்டு, இயேசுவின் அருகே வந்தான். அவனுடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. உடனடியாக பார்வை வந்து விட்டது. அவன் இயேசுவின் பின்னால் சென்றான்.
அந்தக் கூட்டத்தில் சகேயு என்பவனும் இருந்தான். இயேசுவைப் பார்க்க கூட்டம் அதிகமாக இருந்ததால், ஒரு மரத்தின் மீது ஏறி அவரைப் பார்க்க காத்திருந்தான். அந்தளவுக்கு அவர் மீது அவனுக்கு விசுவாசம். இயேசு அந்த மரத்தின் அருகே வந்ததும், அண்ணாந்து பார்த்து, ''சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்,'' என்றார்.
சகேயு மட்டுமல்ல, கூடியிருந்த அனைவருமே ஆச்சரியப்பட்டனர். 'சகேயுவின் பெயர் இவருக்கு எப்படி தெரிந்தது? எவ்வளவோ பணக்காரர்கள் இருந்தாலும், சாதாரண மனிதனான சகேயுவின் வீட்டில் இவர் தங்கப் போகிறாரே?' இப்படி பலவாறான சந்தேகங்கள்.
ஆனால், இயேசு தன் மீது முழுநம்பிக்கை வைத்து மரத்தின் மீதேறி தன்னைக் கண்ட முன்பின் தெரியாத சகேயுவுக்கே இரங்கினார். நமது ஒவ்வொருவர் பெயரையும் அவர் அறிவார். அவர் நம்மை அழைக்க வேண்டுமானால், அவர் மீது நாமும் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும்.