
டி.பவித்ரன், சிங்கம்புணரி, சிவகங்கை.
*அயோத்தி என்றால் என்ன?
யுத்தம் என்றால் போர். அயுத்தம் என்றால் 'போர் இல்லாத இடம்'. தெய்வீகம், ஐஸ்வர்யம், வீரம் நிறைந்த ஊர் அயோத்தி.
எம்.கிஷோர், வீரவநல்லுார், திருநெல்வேலி.
*ராமாயணம் உணர்த்தும் தத்துவம் என்ன?
பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள், உறவினர், நண்பருக்கு விட்டுக் கொடுப்பவனே உத்தமன்.
என்.ஸ்ரீநிதி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி.
*தற்காலத்தில் ராமாயண கதாகாலட்சேபம் குறைந்து வருகிறதே...
இந்தியா முழுவதும் (தமிழகம் தவிர்த்து) அரசின் ஆதரவோடு ராமாயண கதாகாலட்சேபம் நடக்கிறது.
பி.அனிதா, திட்டக்குடி, புதுச்சேரி.
*ராமருக்கு மட்டும் கோயில்கள் அதிகம் ஏன்?
மனிதனாகப் பிறந்து துன்பத்திற்கு ஆளானாலும் தர்மம் தவறாமல் வாழ்ந்தவர் ராமர். அதனால் அவருக்கு கோயில்கள் அதிகம்.
கே.பவானி, தொட்டபள்ளாபுரா, பெங்களூரு.
*அணிலைப் பற்றி பாடிய ஆழ்வார் யார்?
தொண்டரடிப் பொடியாழ்வார். 'தன் மீது ஒட்டிய கடல் மண்ணை உதிர்த்து, பாலம் கட்ட ராமருக்கு உதவிய அணில் போல நான் இல்லையே' என வருந்தி பாடியுள்ளார்.
ஆர்.ஆராதனா, பீளமேடு, கோயம்புத்துார்.
*ராமனின் அருள் பெற்ற அடியவர்கள் பற்றி....
அனுமன், வால்மீகி, கம்பர், தியாக பரபிரம்மம் என நீண்ட பட்டியல் உண்டு. அயோத்தி ராமர் கோயிலை தரிசிப்பவர்கள் அவரின் அருள் பெற்றவர்கள்.
எல்.அபினவ், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்.
*முருகனுக்குரிய ஸ்லோகம் ஒன்று சொல்லுங்கள்.
உமாகோமள ஹஸ்தாப்யாம்
ஸம்பாவித லலாடகம்|
ஹிரண்ய குண்டலம் வந்தே
குமாரம் புஷ்கரஸ்ரஜம்||
ஏ.கங்காதரன், மயூர்விகார், டில்லி.
*தைப்பூசத்தன்று எந்த தெய்வத்தை வழிபடுவது சிறப்பு?
பவுர்ணமியும், பூசமும் சேரும் அந்நாளில் சிவன், முருகனுக்கு விழா நடத்துவது நல்லது. அன்று மதுரையில் மீனாட்சியம்மனும், சொக்கநாதரும் தெப்பத்தில் வலம் வருவர்.
வி.சஞ்சய், நிலக்கோட்டை, திண்டுக்கல்.
*முருகனுக்கு பிடித்த ராகம் எது?
சண்முகப்பிரியா. அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் இந்த ராகத்தில் பல பாடல்கள் உள்ளன.