
எம்.பூர்ணிமா, பொன்னேரி, திருவள்ளூர்.
*அன்பான அம்பிகை ஏன் காளியாக அவதரித்தாள்?
தீயசக்திகளை அடக்கும் போது சாந்தமான அம்பிகை, உக்கிர வடிவில் காளி ஆகிறாள்.
ஆர்.வைஷ்ணவி, திரிவேணிபுரி, டில்லி.
*சிவனைப் போல அம்மனுக்கும் நந்தி வாகனம் இருப்பது ஏன்?
சிவனும், சக்தியும் இணைந்திருக்கும் கோயில்களில் அம்மனுக்கு நந்தி இருக்கும். அம்மனுக்கான தனிக்கோயில்களில் சிங்கம் இருக்கும்.
வி.கீர்த்தனா, பாகனேரி, சிவகங்கை.
*வாசலில் கடவுளின் உருவத்தை கோலமிடலாமா?
கடவுளின் மீது நம் கால்கள் படலாமா... நீங்களே சொல்லுங்கள்.
எல்.ஆர்த்தி, பள்ளியாடி, கன்னியாகுமரி.
*ஹோமத்தில் இட்ட நாணயங்களை எங்கு வைக்க வேண்டும்?
பணம் வைக்கும் பீரோவில் வைப்பது நல்லது.
வி.எல்.சாந்தகுமார், கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி.
*கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் பாடியவர்கள் யார்?
கந்தசஷ்டி கவசம் - தேவராய சுவாமிகள்.
கந்தகுரு கவசம் - சாந்தானந்த சுவாமிகள்
ஜி.ராம் கிஷோர், கோத்தகிரி, நீலகிரி.
*சுபநிகழ்ச்சியின் போது காப்பு கட்டுவது ஏன்?
திருமணம், கோயில் திருவிழா, கும்பாபிஷேகம் போது அதை நடத்துவோரின் பாதுகாப்புக்காக கடவுளை வழிபட்டு காப்பு கட்டுகின்றனர்.
எஸ்.ஆனந்தன், சன்னபட்னா, பெங்களூரு.
*கோயில் நிலைப்படியைத் தாண்டித்தான் செல்ல வேண்டுமா...
நிலைப்படியை தொட்டு வணங்குவது அவசியம்.
கே.காருண்யா, தேவதானப்பட்டி, தேனி.
*சித்தர்களின் ஜீவசமாதிகளை அமாவாசை, பவுர்ணமியன்று தான் தரிசிக்கணுமா?
இல்லை. எப்போதும் தரிசிக்கலாம்.
பி.பார்த்திபன், ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி.
*என் தாயார் பூஜித்த விக்ரகங்களை எளிய முறையில் தினமும் பூஜிக்கலாமா?
தினமும் பூக்கள் சாத்தி பால் நைவேத்யம் செய்யுங்கள். வெள்ளி அல்லது ஞாயிறன்று பால் அபிஷேகம் செய்யுங்கள்.
ஆர்.தாமோதரன், பிராட்வே, சென்னை.
*எனக்கு வயது 84. தரையில் உட்கார முடியவில்லை. நாற்காலியில் அமர்ந்து சந்தியாவந்தனம் செய்யலாமா?
செய்யலாம். தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு நன்றி. வருங்கால சந்ததிக்கு நல்வழி காட்டுகிறீர்கள்.