
*நோயின்றி வாழ...
எம்.கதிர்வேல், சிங்காநல்லுார், கோயம்புத்துார்.
பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிச|
ஜபேந்நாமத்ரயம் நித்யம் சர்வரோக நிவாரணம்||
நோயின்றி வாழ இந்த ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லி திருநீறு பூசுங்கள்.
*அனுக்ஞை விநாயகர் என்றால்...
எம்.சிந்துஜா, கண்டமங்கலம், புதுச்சேரி.
அனுக்ஞை என்றால் அனுமதி பெறுதல். யாகம், ஹோமம், திருவிழா கோயிலில் நடக்கும் முன் இவரிடம் அனுமதி பெறுவர்.
*ஸரிகமபதநி என்றால் என்ன?
வி.சங்கர்,கோவில்பட்டி, துாத்துக்குடி.
ஸட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகிய ஏழும் சப்த ஸ்வரங்கள். இவற்றின் முதல் எழுத்துக்களே 'ஸரிகமபதநி'. இதுவே இசைக்கு ஆதாரம்.
*நம்பிக்கை துரோகியை சந்திக்க நேர்ந்தால்...
ஆர்.கோமதி, பெரும்பாக்கம், சென்னை.
புன்முறுவலுடன் கடந்து செல்லுங்கள். அவரைக் கடவுள் கவனித்துக் கொள்வார்.
*குரோதி ஆண்டின் பலன் மோசமானதா?
எஸ்.பாலவிநாயகம், அருவங்காடு, நீலகிரி.
குரோதி என்ற பெயரைக் கண்டு பயப்படாதீர்கள். இந்த ஆண்டின் ராஜா செவ்வாய். அவருக்குரிய கடவுளான முருகனை வழிபட்டால் நன்மை சேரும்.
*மாசிக் கயிறு பாசி படியும் என்கிறார்களே...
எம்.வனஜா, பசுமலை, மதுரை.
எமனிடம் இருந்து கணவரைக் காத்தவள் சாவித்ரி. மாசி, பங்குனி இணையும் நேரத்தில் இவளை நினைத்து நோன்புக்கயிறு கட்டினால் சுமங்கலி பாக்கியம் நிலைக்கும். இதை விளக்குகிறது இந்த பழமொழி.
*பயணிகள் இளைப்பாற நிழற்குடை அமைப்பது புண்ணியமா...
பி.ரோகித், திருவட்டாறு, கன்னியாகுமரி.
புண்ணியம். ஆனாலும் உங்கள் பெயரை அதில் விளம்பரம் செய்யாதீர். நிழற்குடை அமைத்தால் நெருப்பு, உஷ்ணம் தொடர்பான தீமை உங்களுக்கு வராது.
*ராம நாம ஜபத்தில் பிரணவ மந்திரமான 'ஓம்' சேர்ப்பதில்லையே...
கே.ஸ்ரீராம், சின்னமனுார், தேனி.
ராம என ஜபித்தால் போதும். பிரணவ மந்திரம் இதில் அடங்கியுள்ளது.
*திருமணத்தை 'கால்கட்டு' என்பது ஏன்?
எம்.பிரீதி, அடகூர், மைசூரு.
திருமண பந்தம் மனிதனை பொறுப்பானவனாக மாற்றும். மனப்பக்குவத்தை தரும். இதையே கால்கட்டு என்கின்றனர்.
*பாலாலயம் செய்த கோயிலில் திருவிழா நடத்தலாமா?
ஆர்.கற்பகம், நொய்டா, டில்லி.
அந்தந்த கோயிலில் முன்னோர் வகுத்த நடைமுறையை பின்பற்றுங்கள். சில கோயில்களில் கும்பாபிஷேகத்திற்கு முன்பும் திருவிழா நடத்துவது உண்டு.