ADDED : மார் 05, 2020 08:11 AM

வேண்டுதலை கடவுளுக்கு சொன்னால் தான் தெரியுமா?
கே.மாலதி, சென்னை
'வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ' என்கிறார் மாணிக்க வாசகர். நமக்கு என்ன வேண்டுமோ, அதையறிந்து கேட்காமலேயே கடவுள் தருவார். ஆனால் வேண்டுதல் நியாயமானதாக இருக்க வேண்டும்.
* அரோகரா என்பதன் பொருள் என்ன?
பி.சந்தோஷ், மதுரை
'ஹர ஹர' என்பதே அரோகரா என்றானது. 'ஹர' என்றால் 'போக்குதல்'. 'எனது கஷ்டங்களையும், பாவங்களையும் போக்கியருள வேண்டும் கடவுளே!'என இரு முறை உரக்கச் சொல்வதே அரோகராவின் பொருள்.
* அஷ்டமத்து சனிக்கு பரிகாரம் சொல்லுங்கள்
எம்.பிருத்வி,திருப்பூர்
திங்கட்கிழமை தோறும் சிவனுக்கு வில்வமாலை சாத்தி வழிபடுங்கள். எமனையே சம்ஹாரம் செய்த சிவன் அருளால் நலமாய் வாழலாம்.
தலையில் அடிக்கடி காகம் கொத்துகிறதே...
பி.வசந்த், கடலுார்
பிதுர்தோஷம் அல்லது சனிதோஷம் இருந்தால் இப்படி நடக்கும். சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.
* சிவார்ப்பணம், கிருஷ்ணார்ப்பணம் என்றால் என்ன?
கே.ராகவி,திருத்தணி
எல்லாம் கடவுளின் செயல் என்பதைச் சொல்லும் தத்துவம் இது. இன்பம் வரும் போது கடவுளுக்கு நன்றி கூறாதவர்கள், துன்பம் வந்தால் இப்படி சோதிக்கிறாரே எனப் புலம்புகிறார்கள். நல்லதோ, கெட்டதோ இரண்டையும் அவரிடமே அர்ப்பணித்தால் மனம் பக்குவமாகி விடும்.
* கோயிலில் துாங்கினால் மலைப்பாம்பாக பிறப்பார்களாமே?
பி.சித்தார்த்,புதுச்சேரி
சர்வ வல்லமை மிக்க கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். பக்தர்கள் வேண்டுவதை எல்லாம் வரமாக அருளும் இடம். இங்கு சாப்பிடுவது, துாங்குவது, தேவையற்றதை பேசுவது போன்றவற்றைச் செய்தால் பாவம் சேரும். மறுபிறவியில் கஷ்டப்பட நேரிடும்.