
* கிருமி தொற்றால் கோயிலில் நடை சாத்துவதை ஆகமம் ஏற்கிறதா?
கே.சந்துரு, திருப்பூர்
நடை சாத்துதல் என்பது பூஜை நடக்காமல் இருப்பது. கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பது மக்கள் கூடுமிடத்தில் நோய் பரவுவதால் ஏற்பட்ட தற்காலிக நிலை. இரண்டையும் குழப்ப வேண்டாம். ஆகம முறைப்படி கோயில்களில் அன்றாட பூஜைகள் சரிவர நடந்து வருகின்றன.
* கையில் கயிறுகளை எத்தனை நாள் வரை கட்டலாம்?
பி.பிரேம் குகன், கடலுார்
குடும்ப வழக்கப்படி சிவப்பு அல்லது கறுப்புக் கயிறுகளைச் சிலர் கட்டியிருப்பர். எல்லா நாளும் அவர்கள் கட்டியிருக்கலாம். மற்றவர்கள் எந்த நோக்கத்திற்காக கட்டி இருக்கிறார்களோ அந்த நாள் வரை கட்டலாம்.
* இல்லறம், துறவறம் - எதை பின்பற்றுவது நல்லது?
டி.சம்ருதி, திருவள்ளூர்
ஹிந்து மதம் துறவறத்தை வலியுறுத்துவதில்லை. ஆசைகளை குறைக்கவே சொல்கிறது. இல்லறத்தை முறைப்படி நடத்த வழிகாட்டுகிறது. 'பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே' (கைலாயத்தை ஆளும் சிவபெருமான் அன்னை பார்வதியுடன் சேர்ந்தே காட்சியளிக்கிறார்) என கடவுளை அம்மையப்பராக கண்டு மகிழ்ந்ததை தேவாரப்பாடலில் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். ஆணும், பெண்ணுமாக இணைந்த நிலையில் அர்த்த நாரீஸ்வரர், லட்சுமி நாராயணர் என வழிபடுவதே இல்லறத்தின் மேன்மையைக் காட்டுகிறது.
வாழ்வில் வளம் பெற பரிகாரம் சொல்லுங்கள்?
எல்.சுதிக்ஷா, விழுப்புரம்
பக்தியுடன் தன்னம்பிக்கை, விடாமுயற்சி சேர்ந்தால் எப்போதும் வளமுடன் வாழலாம்.
கிராமத்துக் கோயில்களில் சிலர் சாமியாடுகிறார்களே...
பி.ஆஷிகா,தேனி
சாமியாடுதல் என்பது அதீத பக்தியால் ஏற்படும் மருட்சிநிலை. இப்படி ஆடுபவர்களை 'மருளாளிகள்' 'மருளாடிகள்' என்பர். இவர்கள் கிராமம் என்றில்லாமல் எந்தக் கோயிலிலும் பரவசநிலைக்கு ஆளாவர்.
* கடவுளை வழிபட்டால் வினைப்பயன் தீருமா?
எம்.சாய்தருண், மதுரை
நாம் செய்யும் பாவ, புண்ணியத்தின் பலனை அனுபவிப்பதற்கு வினைப்பயன் என்று பெயர். தீதும், நன்றும் இதில் அடங்கும். வழிபாட்டை விருப்பு, வெறுப்பு இன்றி செய்தால் வினைப்பயன் தாமாக விலகும்.
மூன்றாம் பிறையை வழிபட்டால் செல்வம் பெருகுமா?
கே.வினய்,ஊட்டி
மூன்றாம் பிறையை வழிபடுவதற்கு சந்திர தரிசனம் என்று பெயர். இதனால் செல்வவளம் பெருகும். நோய் அகலும். நீண்ட ஆயுள் உண்டாகும். எண்பது வயது பூர்த்தி விழா நடத்துபவர்களை 'ஆயிரம்பிறை கண்ட அண்ணல்' எனக் குறிப்பிடுவது இதன் அடிப்படையில் தான்.