
வி.கவிதா, திருப்புவனம், சிவகங்கை.
*மணவறையில் பந்தல்கால் நடுவது ஏன்?
யக்ஷி, தமீ என்னும் தெய்வங்களை வழிபடுவதற்காக மணமேடையின் வடகிழக்கு மூலையில் பந்தல்கால் நடுகிறோம். இவர்களை வழிபடும் மணமக்கள் நலமுடன் வாழ்வர்.
கே.ரதி, சென்னை.
*பறவையைக் கூண்டில் வளர்த்தால்...
பறவையைக் கூண்டில் வளர்த்தால் தோஷம் ஏற்படும்.
ஆர்.அனிதா, மடத்துக்குளம், திருப்பூர்.
*ஒருமுக ருத்திராட்சத்தை யார் அணியலாம்?
எல்லோரும் அணியலாம். ருத்திராட்சம் அணிந்தவர்கள் திருநீறு பூசி, சிவாயநம என சொன்னால் இந்தியாவுக்கே நன்மை சேரும்.
வி.கீதா, ஏரல், துாத்துக்குடி.
*கர்ப்ப கிரகத்தில் எத்தனை முக தீபம் ஏற்றலாம்?
ஐந்துமுக தீபம் ஏற்றுவது சிறப்பு.
எஸ்.துரைச்சாமி, குளச்சல், கன்னியாகுமரி.
*நல்லவர்களின் லட்சணம் என்ன?
உண்மை, நேர்மை, சுயஒழுக்கம், தர்மசிந்தனை உள்ளவர்களே நல்லவர்கள்.
எம்.வைசாலி, காஞ்சிபுரம்.
*தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாதாமே ஏன்?
தென்திசையின் அதிபதி எமன். முன்னோர்களின் பிதுர்லோகம் இருப்பதும் அங்குதான். அதனால் கிழக்கு, வடக்கு நோக்கி தீபம் ஏற்றுங்கள்.
எம்.வினோதினி, பெங்களூரு.
*செய்த உதவியை பிறரிடம் சொல்லக் கூடாதா...
பிறரிடம் இதை சொன்னால் அதற்கான புண்ணியம் நம்மை விட்டு விலகும்.
எம்.பிரசாந்த், கல்லுப்பட்டி, மதுரை.
*பணத்தாசையால் சிலர் அலைகிறார்களே...
பணத்தை சம்பாதிக்கவும் வேண்டும். அதே சமயம் தர்மமும் செய்ய வேண்டும். பணத்தாசை பிடித்தவர்கள் நிம்மதியை இழப்பர்.
எம்.கோகிலா, பப்பன்கிளேவ், டில்லி.
*ஒரே நாளில் இரண்டு துக்க வீட்டிற்குச் செல்லலாமா...
கூடாது. முடியாத சூழலில் முதல் வீட்டில் துக்கம் விசாரித்து வந்ததும் குளியுங்கள். பிறகு அடுத்த வீட்டிற்கு சென்று திரும்பியதும் மீண்டும் குளியுங்கள்.
சி.அவினாஷ், சிதம்பரம், கடலுார்.
*கோயிலுக்குள் இறப்புச் செய்தியைக் கேட்டால்...
துக்க செய்தியை கேட்டதும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுங்கள். (கோயிலுக்குள் அலைபேசி தேவையா)

