
* தெருவில் திருஷ்டி சுற்றிக் கிடந்ததைத் தெரியாமல் மிதித்து விட்டேன். பரிகாரம் சொல்லுங்கள்.
ஜோ.ஜெயக்குமார், சிவகங்கை
தெரியாமல் நிகழ்ந்ததை எல்லாம் நினைத்து பயப்படத் தேவையில்லை. இது முழுக்க அப்படி
வைத்தவர்களின் தவறு தான். உங்கள் மனம் அமைதி பெற வேண்டுமானால், நீராடிவிட்டு நெற்றியில் திருநீறு பூசி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள். அல்லது வழிபாட்டை வீட்டிலேயே கூட மேற்கொண்டால் போதும்.
* கருவறையில் கருங்கல் மட்டும் இல்லாமல் நவீனமான மார்பிள், டைல்ஸ் பதிப்பதை சாஸ்திரம் அனுமதிக்கிறதா?
புவனா, சென்னை
கருங்கல், செங்கல், மரப்பலகை போன்றவை மட்டும் கூறப்பட்டுள்ளன. சாஸ்திரம் தோன்றிய காலத்தில் மார்பிள், டைல்ஸ் போன்றவை இல்லாததால் அவை பற்றிய குறிப்பு காணப்படவில்லை. கருங்கல்லோடு தொடர்புடைய கிரானைட் ஏற்கத்தக்கதே. மார்பிள் நடுத்தரமானது. டைல்ஸ் கற்கள் பீங்கான் சம்பந்தமுடையதாக இருப்பதாலும், கழிப்பறையில் பயன்படுத்தப்படுவதாலும் பதிக்க வேண்டாம்.
பூஜையறையில் சுவாமியை சிலை வடிவில் வைத்து வழிபடுவது நல்லதா?
தீ. துரைராம், திண்டுக்கல்
சிலை வழிபாடு செய்வது நல்லதே. ஆனால், தினமும் அவரவர் சக்திக்கேற்ப அபிஷேகம், சாதம் நைவேத்யம், பூஜை செய்ய வேண்டியது அவசியம்.
** குருவின்றி திரு இல்லை என்று சொல்வது உண்மையா?
ம.ராஜா, திருக்கோவிலூர்
வழிகாட்டி இல்லாமல் செல்ல வேண்டிய இடத்தை அடைய முடியாதல்லவா! எந்தச் செயலாக இருந்தாலும் நமது குறிக்கோளை எட்ட வழிகாட்டியாக ஒரு குருநாதர் வேண்டும். 'திரு' என்றால் நமது குறிக்கோளை அடைவதான வெற்றியைக் குறிக்கும். குருவின்றித் திரு எப்படி கிடைக்கும்? குருநாதர் மூலமே மனத்தெளிவு கிடைக்கும் என திருமந்திர ஆசிரியர் திருமூலர் குறிப்பிட்டுள்ளார். சிறந்த குருநாதர் கிடைக்காத பட்சத்தில், மானசீக குருவாக மறைந்த மகான்களை ஏற்றுக்கொள்ளலாம்.
புத்திர பாக்கியத்திற்காக ராமேஸ்வரம் சென்று வந்தால் நல்லது என்கிறார்களே ஏன்?
கஸ்தூரி, சென்னை
ராமேஸ்வரத்தில் திலஹோமம் என்று ஒரு யாகம் நடத்தப்படுகிறது. இதைச் செய்தால் முன்னோர் சாபம் நீங்கி புத்திர பாக்கியம் விரைவில் உண்டாகும். இதற்கான தெய்வ சக்தி அத்தலத்தில் நிறைந்திருப்பதால் அப்படிச் சொல்கிறார்கள்.