
** மலைக்கோயிலை வாகனத்தில் சுற்றி வந்தால் பலன் கிடைக்குமா?
ம.வாசுதேவன், ஒண்டிப்புதூர்
சுற்றுலா சென்ற மகிழ்ச்சி வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால், கிரிவலம் வந்த பலன் கிடைக்க வாய்ப்பில்லை. மலையை நடந்து சுற்றுவது தான் நிஜமான வலம். அது தான் உடலுக்கும் மனதுக்கும் நல்லது.
* வால்மீகி, துளசிதாசர் போன்றவர்கள் இளமையில் தவறு செய்தாலும், பின்னாளில் ஞானியாகி விட்டார்கள். தற்காலத்தில் ஏன் அப்படி நடப்பதில்லை?
எஸ்.கோவிந்தராஜன், மதுரை
இளமையில் தவறு செய்த பலர் மனமாற்றம் அடைந்து உயர்ந்த நிலைக்குச் செல்வது இன்றும் நடந்து தான் வருகிறது. நாத்திகர்களாக இருந்த பலர் ஆத்திகர்களாக மாறுவதும், தீயவழியில் வாழ்ந்தவர்கள் நல்லவர்களாக மாறி கோயிலே கதி என கிடப்பதையும் காண முடிகிறது. இளமையில் ஞானி வேடம் பூண்டவர்கள் பின்னாளில் தவறு செய்து கீழ்நிலைக்குத் தள்ளப்படவும் செய்கிறார்கள். அவர்கள் மீண்டும் திருந்தி ஞானியாக வலம் வர எவ்வளவு முயன்றாலும் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை. வால்மீகி, துளசிதாசர் போன்றவர்கள் கீழேயிருந்து மேலே வந்தவர்கள். நீங்கள் கேட்டிருப்பதைப் போல உள்ள ஞானிகள் மேலேயிருந்து கீழே வந்தவர்கள். அவ்வளவு தான்.
* பெயரின் முன் 'ஸ்ரீ' என்று சேர்த்துக் கொள்வது ஏன்?
ஆர்.ஜெயபாரதி, சாத்தூர்
இந்து மதத்தைப் பொறுத்தவரை எல்லாவற்றிலும் மங்களம் பொருந்தியிருக்க வேண்டும் என்னும் அடிப்படைத் தத்துவம் உடையதாகும். 'ஸ்ரீ' என்றால் லட்சுமி, திரு (செல்வம்), மங்களம், அழகு என பல பொருள் உண்டு. பெயரிலும் மங்களம் பொருந்தி புகழ் பெற வேண்டும் என்பதாலேயே 'ஸ்ரீ' என சேர்க்கப்படுகிறது. இன்றைய மலேசியா நமது சோழர்களின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட காலத்தில், இந்து தர்மம் பரவியதால் இன்றும் அங்கு பேசப்படும் 'மலாய்' மொழியில் அநேகமான சொற்களில் 'ஸ்ரீ' சேர்ந்துள்ளதைக் காணலாம்.
* வீட்டு வாசலில் படிகாரம், கற்றாழை, எலுமிச்சை போன்றவற்றை கட்டி வைப்பது சரிதானா?
கா.நா.விமலநாதன், சென்னை
கண் திருஷ்டியைப் போக்கும் ஆற்றல் இவற்றிற்கு இருப்பதால் வீட்டு வாசலில் கட்டி வைப்பது நல்லது தான்.
* நந்தீஸ்வரரை வீட்டில் தனியாக பூஜை செய்யலாமா?
பி.சுப்புலட்சுமி, தேவகோட்டை
நந்திகேஸ்வரர் சிவபெருமானின் வாகனம். எனவே, சிவலிங்கத்தின் முன்பாக நந்தியை வைத்து வழிபடுவது தான் சிறப்பு.