
* மஞ்சள் கயிற்றை எந்தெந்த நாட்களில் மாற்றுவது நல்லது?
ஆர்.சியாமளா சென்னை
புதன்கிழமை மிகவும் விசேஷம். தவிர்க்க முடியாத பட்சத்தில் திங்கள், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் மாற்றலாம்.
* விளக்கு பூஜையை கன்னிப் பெண்கள், சுமங்கலிகள் மட்டும் தான் செய்ய வேண்டுமா?
சி.பாக்யலட்சுமி, பெரியகுளம்
விளக்கு என்பது தீபலட்சுமியாகப் போற்றப்படுகிறது. பாலா எனும் கன்னியாகவும், சுவாஸினி என்னும் சுமங்கலி வடிவாகவும் இவள் அருள்பாலிக்கிறாள். இதன் அடிப்படையில், கன்னியர், சுமங்கலிகள் விளக்கு பூஜை செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆண்கள் இதற்கான ஏற்பாட்டை, உதவியைச் செய்யலாம்.
* நல்லவர்களை கடவுள் சோதிப்பது ஏன்?
அ.கிருஷ்ணசாமி, திருப்பூர்
சோதனை என்பது அனைவருக்கும் பொதுவானது. இதன் மூலம் நல்லவனாக வாழ்வதற்கான பயிற்சி உண்டாகிறது. பயிற்சியை தொடங்கும் போதே, ஒருவரைப் பக்குவப்படுத்த முடியும் அல்லது முடியாது என்பது கடவுளுக்குத் தெரியும். உதாரணத்துக்கு தங்கத்தை புடம் போடுவதை எடுத்துக் கொள்ளலாம். பத்தரை மாற்றுத் தங்கமாகும் என்று தெரிவதால் தானே நெருப்பில் இடுகின்றனர். இதுபோல் தான், நல்லவருக்கு சோதனை தந்து கடவுள் பக்குவப்படுத்துகிறார். சோதனை மூலம் மனிதனுக்கும், கடவுளுக்கும் உள்ள இடைவெளி குறையும் அற்புதம் நிகழ்கிறது.
* கோவில் கொடிமரத்தின் முன் விழுந்து வணங்குவது அவசியமா?
ஜி.இந்திரா, பெங்களூரு
கொடி மரம் என்பது மனதில் எழும் தேவையற்ற ஆசையைக் குறிக்கும். அதனருகில் உள்ள பலிபீடம், தீய ஆசை என்னும் அழுக்கை போக்கும் ஆற்றல் கொண்டது. எனவே, கொடி மரத்தின் முன் விழுந்து வணங்கினால் தேவையற்ற ஆசை நீங்கி நிம்மதி உண்டாகும்.
* கோவில்களில் சிலர் குடும்ப அர்ச்சனை என்று செய்கிறார்களே... ஏன்?
சி.எஸ்.வெங்கட்ராமன், போத்தனூர்
அர்ச்சனை என்பது கடவுளின் அருள் பெறுவதற்கான வழிபாடு. பிற்காலத்தில் நமது விருப்பத்தை எல்லாம் சொல்லி, அவை நிறைவேற செய்யும் வழிபாடாக மாறியது. பக்குவம் பெற்ற சிலர், சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்து வந்தனர். நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது சுவாமிக்கு தெரியும் என்ற காரணத்தால் இவ்வாறு செய்தனர். சிலர் வீட்டிலுள்ளவர்கள் பெயரை சொல்லாமல், பொது குடும்ப நலன் வேண்டி குடும்ப அர்ச்சனை என்ற பெயரில் செய்கின்றனர். இதில் எதுவுமே தவறு அல்ல. ஒரு வழக்கத்தை மேற்கொண்டால், அடுத்த நிலைக்கான பக்குவம் தானாக வரும்.
* பைரவருக்கு பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபடுவது ஏன்?
இ.நாகராஜன், சாத்தூர்
இந்த வழக்கமெல்லாம் பிற்காலத்தில் ஏற்பட்டதே. ஆனால், அனுபவ ரீதியாக பலன் தருவதால் மக்கள் பின்பற்றுகின்றனர். பூசணிக்காயை காளி, பைரவர் போன்றோருக்கு பலியிடுவர். பிற்காலத்தில், இதுவே எலுமிச்சை தீபம் போல பூசணி தீபமாக மாறி விட்டது.

