
உள்ளதைச் சொல்கிறார் ராஜாஜி
* குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க குளத்திற்குப் போனால், தெளிந்த நீரை மேலாக எடுத்துவருவது தான் சிறந்தது. அதை விடுத்து, குளத்துக்குள் இறங்கி கலக்கினால் சேறு மேலே வந்து விடும். அதுபோல பக்தியிலும் மிதமான நிலையே போதுமானது.
* மிதமிஞ்சிய சமய அறிவு, மற்றவருடன் வாதங்களில் ஈடுபடுதல் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதால் மூளையைக் குழப்பிக் கொள்ள நேரிடும். நம்முடைய அறிவு சிற்றறிவு. கடவுளோ பேரறிவாளராக இருக்கிறார். அதனால், நம்முடைய அறிவைக் கொண்டு அவரை அளக்க முடியாது.
* தயிருக்குள் இருக்கும் வெண்ணெய் போன்று கடவுள் மறைந்து விளங்குகிறார். அவரைக் காண வேண்டுமென்று விரும்பினால் உள்ளத்தைப் பக்தியால் கடைய வேண்டும். தத்துவ ஞானத்தை வளர்த்துக் கொண்டால் புலமை தான் வளருமே ஒழிய, ஞானம் உண்டாகாது.
* பக்தியில் உறுதியாக நில்லுங்கள். எளியதியானப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். மனம் ஒன்றி இறைவனை வழிபடுங்கள். கடவுளின் பூரண அருளை நிச்சயம் பெற்று மகிழ்வீர்கள்.