ADDED : டிச 26, 2019 02:48 PM

சிவனின் மந்திரமான 'பஞ்சாக்கர பதிகம்' பாட நன்மை கிடைக்கும்.
துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.
மந்திரம் நான்மறை ஆகி வானவர்
சிந்தையுள் நின்று அவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே.
நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ
கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே.
கொங்குஅலர் வன்மதன் வாளிஐந்து அகத்து
அங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில்
தங்கு அரவின் படம் அஞ்சும் தம் உடை
அங்கையில் ஐவிரல் அஞ்செழுத்துமே.
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்செழுத்துமே.
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பன அஞ்செழுத்துமே.
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்தபின் அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே.
கார்வணன் நான்முகன் காணுதற்கு ஓணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன அஞ்செழுத்துமே.
புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே.
நற்றமிழ் ஞானசம்பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே.