ADDED : ஜூலை 08, 2011 10:35 AM

மனிதன் என்பவன் நிறை மற்றும் குறைகளின் கூட்டாக உள்ளான். ஆனால், குறைகளை மட்டுமே பெரிதுபடுத்தி, தனது முன்னேற்றத்திற்கு தானே முட்டுக்கட்டை இட்டுக்கொள்கிறான். குறைகள், பலவீனங்களை எண்ணுவதை விட, நமது பலத்தைப் பற்றி சிந்திப்பதே உயர்வுக்கு வழி.
அமெரிக்காவில் வசித்த ஹெலன்கெல்லர் என்ற பெண்மணியை பற்றி அறிந்திருப்பீர்கள். இவர், குழந்தையாய் இருந்த போது காய்ச்சல் ஏற்பட்டு பார்வை, பேச்சு, கேட்கும் திறன் எல்லாவற்றையும் இழந்தார். ஆனால், அதுபற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சிறப்பாக படித்து ஆனர்ஸ் பட்டம் பெற்றார். பல கட்டுரைகளை எழுதினார். பார்வையற்றோர் நிறுவனம் ஒன்றிற்கு இருபது லட்சம் டாலர் வசூலித்து கொடுத்தார். 88 வயது வரை வாழ்ந்த அவர், பார்வைற்றவர்களுக்கு உதவுவதை தனது குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.
இவரது உழைப்பும் கட்டுரைகளும் புகழ் பெற்ற எழுத்தாளர் மார்க் ட்வைனைக் கவர்ந்தது. ''ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவரது வாழ்க்கை தூண்டுதலாக அமைந்தது,'' என பாராட்டினார். எல்லா அமெரிக்க அதிபர்களும் ஹெலனை அழைத்து விருந்தளித்து பாராட்டினர். பார்வைற்றோர் நலனுக்காக செயல்படும் ஒரு அமெரிக்க நிறுவனம் ஹெல்லரின் பெயரால் அகில உலக பரிசு ஒன்றை அறிவித்துள்ளது.
பார்வை, பேச்சு, கேட்கும்தன்மை ஏதுமில்லாத ஒரு பெண்மணியால் இப்படி சாதிக்க முடிகிறதென்றால், எல்லா சக்திகளும் கொண்ட மனிதன் என்னனென்னவெல்லாம் சாதிக்கலாம்... கொஞ்சம் சிந்தியுங்கள்.
குறிப்பாக, மாணவர்கள், இளைஞர்கள் தங்களின் பலத்தை உணர்ந்து சிறப்பாக படித்தும், கடுமையாய் உழைத்தும் பெற்றவர்களுக்கும், தேசத்துக்கும் பெருமை தேடித் தரவேண்டும். செய்வீர்களா?

