ADDED : ஆக 14, 2025 01:29 PM

ஆயர்பாடியில் இருந்த கண்ணனையும், அவரது அண்ணன் பலராமரையும் மதுரா நகருக்கு அழைத்துச் சென்றார் பக்தரான அக்ரூரர். அனைவரும் அவர்களின் அழகைக் கண்டு மெய்மறந்து நின்றனர். அப்போது முதுகு கூனலான ஒரு முதியவள் சந்தன கிண்ணத்துடன் சென்று கொண்டிருந்தாள். “குணத்தால் உயர்ந்தவளே! சந்தனத்தை எங்கு எடுத்துச் செல்கிறாய்?” எனக் கேட்டார் கண்ணன்.
மதுராபுரி மன்னர் கம்சனின் பணிப்பெண் நான். அசுர மன்னனுக்கு வேலை செய்தே என் வாழ்நாளை வீணாக்கி விட்டேன். இன்று ஒருநாளாவது நல்லவர்களுக்கு சந்தனம் பூச விரும்புகிறேன்'' என்று சொல்லி இருவருக்கும் சந்தனம் பூசினாள். கண்ணனின் அருட்பார்வையால் அவள் இளம்பெண்ணாக மாறினாள்.
இந்தப் பெண் யார் தெரியுமா? கூனியாகப் பிறந்து ராமரைக் காட்டுக்கு அனுப்பக் காரணமான மந்தரை. இந்த பிறவியில் கிருஷ்ணருக்கு சந்தனம் தந்து பாவத்தை போக்கிக் கொண்டாள். கண்ணனை சரணடைந்தால் முன்வினை பாவம் தீரும்.
