ஆந்திராவிலுள்ள கடப்பாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் விஷ்ணுபக்தனாக இருந்தான். அவனது தந்தையான நாராயண சூரியோடு வயலில் வேலை செய்யவோ, பசுக்களை மேய்க்கவோ அவன் விரும்பவில்லை.
ஏழுமலையை தரிசிக்கும் ஆசையால் துாக்கம் இல்லாமல் தவித்தான். ஒருநாள் பக்கத்து கிராமத்தில் விலைக்கு வைக்கோல் வாங்கி வர அனுப்பினார் தந்தையார். ஆனால் அவனோ திருப்பதி மலை நோக்கி நடந்தான். நீண்ட துாரம் நடந்ததால் பசியும், தாகமும் அதிகரித்தது. அடர்ந்த வனப் பாதையான மலையின் மீது ஏற முடியவில்லை. 'வெங்கடேசா' என அழைத்தான். பசி போக்க பத்மாவதி தாயாரை அனுப்பினார் ஏழுமலையான். எளிய பெண் வடிவில் தோன்றிய பத்மாவதி உணவளித்து மறைந்தாள்.
உண்மையை உணர்ந்த சிறுவன் அதன் பின் தன் வாழ்நாள் முழுவதும் ஏழுமலையானுக்கே அர்ப்பணித்தார். இந்த சிறுவனே பிற்காலத்தில் அன்னமாச்சாரியார் என்னும் பக்தராக விளங்கினார். 'வெங்கடாசல மகாத்மியம்' என்னும் நுாலை எழுதியதும் இவரே.