ADDED : செப் 05, 2024 12:29 PM

ஒரு தவறு செய்தால் பிராயச்சித்தம் செய்கிறோமே.. ஏன்? பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக! இது பற்றி காஞ்சி மஹாபெரியவர் சொல்வதைக் கேட்போமா...
சில சந்தர்ப்பங்களில் நம் வேலையை குறுக்கு வழியில் செய்கிறோம். அப்படி செய்தால் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். இதை 'தெரிந்தே செய்யும் தவறு' என்பார்கள்.
தவசீலனான ராவணன் ஆணவத்தால் தவறுகளைச் செய்தான். அதர்மத்தைச் செய்தால் கடவுள் சும்மா இருப்பாரா? க்ஷத்திரிய குலத்தில் ஸ்ரீராமராக அவதரித்தார். அவருக்கும் தீமை செய்ய துணிந்தான் ராவணன். அவனோடு சண்டையிட கடவுள் பூமிக்கு வரவில்லை. தன் தந்தை தசரதரின் வாக்குக்காக நாட்டையே 'வேண்டாம்' என உதறியவர் அவர். ஆனாலும் சாதுக்களுக்குத் தொல்லை கொடுப்பது, தர்மத்தை புறக்கணிப்பது என ஒருவன் செயல்பட்டால் அவனை கொன்றாலும் பாவம் இல்லை என ராவணனைக் கொன்றார். அது போல பெண்ணைக் கொல்வது பாவம். ஆனாலும் தாடகை என்னும் அரக்கியைக் கொன்றார். குரங்கை வதம் பண்ணக் கூடாது. வாலி என்னும் வானரத்தை மறைந்து நின்று கொன்றார். எதற்காக? தர்மத்தை நிலை நாட்டுவதற்காக! இவர்களை கொல்லக் கூடாது என்றாலும், நல்லவர்களைக் காக்க ராமர் இதைச் செய்தார்.
தன் பாவத்தை போக்க ராமேஸ்வரம், வேதாரண்யம், பட்டீஸ்வரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தார் ராமர். ஒரு காரியத்தைச் செய்ய வேண்டிய அவசியம் வந்து விட்டது. அது பாவம் எனத் தெரிந்தாலும் அதைச் செய்யாவிட்டால் மக்கள் சிரமப்படுவார்கள். வழியின்றி மக்களை காக்க தவறு செய்தார். அதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பிராயச்சித்தம் செய்தார்.
உதாரணமாக குழந்தை ஒன்று சேற்றில் விழுந்தது. அதைக் காப்பாற்ற சேற்றில் இறங்கினாள் அம்மா. பின்னர் எதற்காக வெளியே வந்தவுடன் நீரால் கழுவுகிறாள்?' என அவளிடம் கேட்டால் சரியா? சந்தர்ப்பத்தால் சேற்றில் இறங்கினாள்.
அது முடிந்தவுடன் சேற்றை கழுவினாள். நன்மைக்காக தவறு செய்தாலும் அதற்காக பிராயச்சித்தம் செய்ய வேண்டும். ஆனால் மறந்தும் தவறு செய்யாத நிலைக்கு மனிதன் உயர வேண்டும். அதாவது வேண்டும் என்றே தவறு செய்து பின் பிராயச்சித்தம் தேட கூடாது.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்
போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com