ADDED : ஆக 20, 2026 11:16 AM

காஞ்சி மஹாபெரியவர் கேட்டுக் கொண்டபடி, ராஜராஜசோழன் பற்றிய கட்டுரை ஒன்றை தயார் செய்து சுவாமிகளிடம் கொடுத்தார் தஞ்சாவூர் சந்தானராமன். அவரை அங்கேயே நிற்கும்படி சுவாமிகள் சைகை காட்டினார். அச்சமயம் நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் சுவாமிகளிடம் ஆசி பெற்று சென்று கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு பிரசாதம் கொடுத்துக் கொண்டே, 'சந்தான ராமா... கட்டுரையை படிக்கலாமே' என்றார்.
அவரும் படிக்கத் தொடங்கினார்.பக்தர்களுக்கு மஹாபெரியவர் ஆசியளித்துக் கொண்டே இருந்ததால் சிறிது நேரத்தில் முடிய வேண்டிய கட்டுரை, மணிக்கணக்கில் நீடித்தது.
தாமதம் ஆவதைப் பற்றி சந்தானராமன் கவலைப்படவில்லை. கொடுத்த வேலையை சரியாக செய்தோம் என்ற திருப்தியுடன் இருந்தார். ஆனால் அவர் காத்திருக்கிறாரே என சங்கடப்பட்டார் மஹாபெரியவர்.
திடீரென அவரிடம், 'சந்தானராமா... நீ புதுப் பெரியவாளை (ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்) தரிசனம் பண்ண அடிக்கடி காஞ்சிபுரம் வர்றியோ?' எனக் கேட்டார்.
'ஆமாம் பெரியவா...' என்றார் சந்தான ராமன்.
'வர்ற பக்தாளிடம் அவர் எப்படி பேசுறார்?' எனக் கேட்டார்.
என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் சந்தானராமன் தயங்கினார். ஏதோ ஒரு விஷயத்தை மனதில் வைத்தே இப்படி கேட்கிறார் என்பது புரிந்தது.
'ஆமாம் பெரியவா... என் கூட விஷயங்களை பேசிட்டே வர்ற பக்தர்களுக்கும் சீக்கிரமா பிரசாதம் கொடுப்பார்' என்றார்.
இதைக் கேட்டதும் மஹாபெரியவர், 'இதுக்குத் தான் கேட்டேன். வர்றவாளோட பேசிண்டே இருக்கணும். அதே நேரத்தில உன்னை மாதிரி வர்றவா சொல்றதையும் கேட்கணும். இப்படி ஒரே நேரத்தில இரண்டையும் பண்ண எனக்கு தெரிய மாட்டேங்குது' எனச் சொல்லி சிரித்தார்.
தன் கவுரவத்தை பற்றி சிறிதும் நினைக்காமல் மனசில் பட்டதை வெளிப்படையாக சொல்கிறாரே மஹாபெரியவர் என நெகிழ்ந்தார் சந்தானராமன்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* பூஜைக்கு பயன்படுத்திய பூவை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
* பெண் தெய்வத்திற்கு கருப்பு நிற ஆடையை சாத்தக்கூடாது.
* சாப்பிடும் போது காலணி அணியாதீர்கள்.
* நோயின்றி வாழ பகலில் துாங்க வேண்டாம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com
