
ஜன.23 - தாயுமானவர் குருபூஜை
'நாம் கொண்டு வந்தது எதுவுமில்லை. கொண்டு போவது எதுவுமில்லை' என்பதை பாடல் மூலம் உலகுக்கு உணர்த்தியவரே தாயுமானவர் சுவாமி. வேதாரண்யத்தில் சைவ மரபில் கேடிலியப்ப பிள்ளை, கெஜவல்லியம்மாளுக்கு மகனாக பிறந்தார்.
சிறுவனாக இருந்த போதே தாயுமானவர் பக்தியில் ஈடுபாடு கொண்டார். கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் போது அவருக்கு கண்ணீர் பெருகும்.
இவரது தந்தையார் திருச்சி மன்னர் விஜயரங்க சொக்கநாதரிடம் அரண்மனை கணக்கராக இருந்தார். தந்தைக்கு பிறகு அந்தப் பொறுப்பை தாயுமானவர் ஏற்றார். இவரது ஞானத் தெளிவு, பொறுப்பு, நேர்மை ஆகியவை மன்னரைக் கவர்ந்தன. அதனால் மனம் மகிழ்ந்த மன்னர் விலை உயர்ந்த காஷ்மீர் சால்வை ஒன்றை பரிசளித்தார். அரண்மனை பணியை முடித்து வெளியே வரும் போது முதிய பெண் ஒருவர் குளிரில் நடுங்கியபடி தெருவில் வந்தாள். அவளைப் பார்த்ததும் மனம் வருந்திய தாயுமானவர், அதை அவளுக்கு தானமாக கொடுத்தார்.
இதையறிந்த மன்னர் தன்னை அவமானப்படுத்தியதாக கருதி தாயுமானவரிடம் விசாரித்தார்.
''வயதான மூதாட்டி என் கண்களுக்கு அகிலாண்டேஸ்வரியாக தெரிந்தாள். அவள் குளிரில் நடுங்குவதை காண சகிக்கவில்லை'' என்றார்.
கஷ்டத்தில் உழலும் உயிரை அம்பிகையாக கருதிய தாயுமானவரின் தாய் மனசைக் கண்டு நெகிழ்ந்தார் மன்னர். அவரை குருநாதராக ஏற்றார்.
தாயுமானவர் பாடல்களை பாடினால் மனம் உருகி விடும்.
துள்ளு மறியா மனது பலி கொடுத்தேன் கர்ம
துஷ்ட தேவதைகள் இல்லை
துரியநிறை சாந்த தேவதையாம் உனக்கே
தொழும்பன் அன்பு அபிஷேக நீர்
உள்ளுறையில் என் ஆவி நைவேத்தியம்
பிராணன் ஓங்குமதி துாப தீபம்
ஒருகாலம் அன்று இது சதாகால பூஜையாய்
ஒப்புவித்தேன் கருணைகூர்
தெள்ளிமறை வடியிட்ட அமுதப்பிழம்பே
தெளிந்த தேனே சீனியே
திவ்ய ரசம் யாவும் திரண்டு ஒழுகு பாகே
தெவிட்டாத ஆனந்தமே
கள்ளன் அறிவூடுமே மெள்ளமௌ
வெளியாய்க் கலக்க வரும் நல்ல உறவே
கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு
கருணாகரக் கடவுளே
கடவுளே! துள்ளுகின்ற என் மனம் என்னும் ஆட்டைப் பலி கொடுத்தேன். ஆகையால் தீய செயல்கள் என்னும் துஷ்ட தேவதைகள் இனி என்னை வருத்தாது. சாந்த தேவதையான உனக்கு அன்பையே நீராகக் கொண்டு அபிஷேகம் செய்தேன். என் உயிரையே நைவேத்யமாகப் படைத்தேன். மூச்சுக் காற்றை உனக்குத் துாபமாகச் செய்தேன். அறிவையே உனக்குத் தீபமாக ஒளி வீசச் செய்தேன் என்கிறார் தாயுமானவர்.