தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு


ADDED : மார் 13, 2025 03:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2025 03:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்நாளில் சாவித்திரி தேவியை வழிபடுவதால் இதற்கு 'சாவித்திரி விரதம்' என்றும் பெயருண்டு.

இந்த நோன்பு நாளில் தான், கணவர் சத்தியவானை எமனின் பிடியில் இருந்து மீட்டாள் சாவித்திரி. இதனடிப்படையில் சுமங்கலிகள் தாலி பாக்கியம், கணவருக்கு நீண்ட ஆயுள், தம்பதி ஒற்றுமை வேண்டி விரதமிருப்பர்.

மந்திர தேசத்து மன்னர் அஸ்வபதி. ஒருநாள் நாரதரிடம், தனக்கு புத்திர பாக்கியம் இல்லாததைச் சொல்லி வருந்தினார் மன்னர். சாவித்திரி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றார் நாரதர்.

அதன்படியே மன்னருக்கு பிறந்த மகள் சாவித்திரி. கல்வி, கலைகளைக் கற்றுத் தந்து வீரமங்கையாக மகளை வளர்த்தார் அவர். ஒருநாள் வேட்டைக்குப் போன சாவித்திரி, காட்டில் சாளுவ தேசத்து மன்னர் சால்வன், அவரது மனைவி, மகன் சத்தியவானைச் சந்திக்க நேர்ந்தது. போரில் நாட்டை இழந்த சால்வன் காட்டில் குடில் அமைத்து வாழ்ந்தார். சால்வனும் அவரது மனைவியும் பார்வை குறை உள்ளவர்கள். அவர்களை பாசமுடன் சத்தியவான் கவனிப்பதைப் பார்த்த சாவித்திரி, அவன் மீது காதல் கொண்டாள். 'இந்த குணவான் சத்தியவானே எனக்கு ஏற்ற கணவர்' எனத் தீர்மானித்தாள். விஷயத்தைத் தன் தந்தையிடம் தெரிவிக்க அவரும் சம்மதித்தார்.

மந்திர தேசம் வந்த நாரத மகரிஷிக்கு மகளின் விருப்பத்தை தெரிவித்தார் அஸ்வபதி.

'சத்தியவானுக்கு அற்பாயுள் என்பதால் எமன் அவனை நெருங்கும் காலம் வரப் போகிறது' என எச்சரித்தார். ஆனாலும் மன உறுதியுடன் சத்தியவானைக் கணவராக அடைந்தாள்.

அரண்மனை வாழ்வைத் துறந்து காட்டிற்குச் சென்றாள். மாமனார், மாமியாரைப் பரிவுடன் கவனித்தாள். காலம் வேகமாக ஓடியது. சத்தியவானின் ஆயுள் முடியும் காலம் நெருங்கியது. ஒருநாள் சாவித்திரியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்த சத்தியவானின் தலை கீழே நழுவியது. கணவரின் உயிரை எமன் கவர்ந்து செல்வது அவளுக்கு தெரிந்தது. தன் கற்புத்திறத்தால் எமனைப் பின்தொடர்ந்தாள். இறுதியில் போராடி கணவரின் உயிரையும் மீட்டாள். அப்போது மாமனார், மாமியாருக்கு கண் பார்வை, சால்வனின் இழந்த நாடு, தன் தந்தையாருக்கு ஆண் வாரிசு என பல வரங்களை எமனிடம் பெற்றாள்.

பொதுவாக பெண்களின் பெயருக்கு பின்னர் கணவரின் பெயரை எழுதுவது வழக்கம். ஆனால் கணவரின் மீதுள்ள பக்தியால் இவள் மட்டுமே 'சத்தியவான் சாவித்திரி' எனப்படுகிறாள்.

இந்த நாளில் சுமங்கலிகள் தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்பதற்காக பூவால் சுற்றப்பட்ட மஞ்சள் சரட்டை கழுத்தில் அணிந்து கொள்வர். கணவர் அல்லது வயது முதிர்ந்த சுமங்கலிகளின் கைகளால் சரடு அணிவது சிறப்பு. திருமணம் ஆகாத கன்னியர் சரடு கட்டிக் கொள்ள நல்ல மணவாழ்வு அமையும்.

விரதமிருப்பவர்கள் அரிசி மாவுடன் காராமணி சேர்த்து இனிப்பு, உப்பு அடைகள் செய்வர். அடையோடு உருகாத வெண்ணெய்யை படைத்து வழிபடுவர். குடும்பத்திலுள்ள பெண்கள் ஒன்றாக அமர்ந்து வெண்ணெய் சேர்த்து அடை சாப்பிட வேண்டும். பசுக்களுக்கு இதை கொடுப்பது அவசியம். அப்போது தான் நோன்பு முழுமை பெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us