
ஆக.12, 2025 - மகாசங்கடஹர சதுர்த்தி
தேய்பிறை சதுர்த்தியின் அதிபதியான சக்தி ஒருமுறை விநாயகரை சந்தித்தாள். ''சுவாமி... வளர்பிறை சதுர்த்தி போல நானும் பெருமையுடன் வாழ விரும்புகிறேன்'' எனத் தெரிவித்தாள். அப்போது விநாயகர் ''தேவி! சந்திரனின் உதய காலத்தில் நீ என்னை வழிபட்டதால் தேய்பிறை சதுர்த்தியும், சந்திரோதயமும் சேரும் இக்காலம் சிறப்பானதாகி விட்டது. இந்த நேரத்தில் வழிபட்டால் சங்கடங்களை போக்கி மங்களத்தை அருள்வேன். நீயும் 'சங்கஷ்ட ஹரணி' என அழைக்கப்படுவாய்'' என வாழ்த்தினார்.
இதன் அடிப்படையில் தேய்பிறை சதுர்த்திக்கு 'சங்கஷ்டஹர சதுர்த்தி' என பெயர் வந்தது. தற்போது சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. 'துன்பம் போக்கும் சதுர்த்தி' என பொருள். இந்நாளில் விரதமிருப்பவர்கள் காலை முதல் மாலை வரை தண்ணீர், பழச்சாறு சாப்பிடலாம். மாலையில் சந்திரனை பார்த்த பின் விநாயகரை வழிபட்டு 108 போற்றி, அஷ்டோத்திரம், அகவல், கவசப் பாடல்களை பாட வேண்டும். உப்பு, புளி, காரம் அதிகம் சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.
இந்த விரதம் மூலம் கிருதவீர்யன் என்னும் மன்னன் கார்த்தவீர்யன் என்னும் வீரனை மகனாகப் பெறும் பேறு பெற்றான். சந்திரன் தனக்கு ஏற்பட்ட காசநோய் நீங்கி குணமடைந்தான். புருசுண்டி முனிவர் நரகத்தில் தவித்த தன் முன்னோர்களை விடுவித்தார். தேய்பிறை சதுர்த்தியும், செவ்வாயும் இணையும் நாளில் நவக்கிரகங்களில் ஒருவரான அங்காரகன் (செவ்வாய்) வழிபட்டு விநாயகரின் அருள் பெற்றார்.
இதன் அடிப்படையில் சங்கடஹர சதுர்த்தியன்று செவ்வாய் அன்று சேர்ந்தால் 'அங்காரக சதுர்த்தி' எனப்படுகிறது. பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக உள்ளவர்கள் கடன் தொல்லை, நோய், எதிரி பயத்தால் சிரமப்படுவர். அங்காரக சதுர்த்தி விரதமிருந்தால் இந்த தோஷம் விலகி நன்மை பெருகும். நம் சந்ததியின் நன்மைக்காகவும், நோய் நீங்கவும், முன்னோர்களின் ஆசி பெறவும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடிப்போம்.

