
பள்ளிக்கூடம் ஒன்றில் ஆன்மிக பேச்சாளர் ராமாயணம் பற்றி எளிய முறையில் உரையாற்றினார்.
ராமாயணத்தில் அனுமனுக்கு ஏன் சிறிய திருவடி என்ற பெயர் வந்தது என்பது பற்றியும் விளக்கி கொண்டிருந்தார். கருடன் எப்போதும் மகாவிஷ்ணுவிடம் இருப்பதால் பெரிய திருவடி என பெயர் பெற்றார். மகாவிஷ்ணுவின் திருவடியிலேயே அனுமன் இல்லை என்றாலும் கடவுளரின் உயிரையே காப்பாற்றினான் என்பதால் சிறிய திருவடி என பெயர் பெற்றார் என்றார் பேச்சாளர்.
எந்த வகையில் அனுமனுக்கு அந்தப் பெயர் கிடைத்தது என்பதை அறிய மாணவர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். “ராமனை பிரிந்த சீதை அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டு இருந்தாள். தன்னை மீட்க ராம லட்சுமணர் இருவரும் வருவார்கள் என காத்திருந்தாள்.
சீதை சிறை வைக்கப்பட்டிருந்த விபரம் தெரியாத நிலையில் அவர்களால் மீட்க வர முடியவில்லை. இந்நிலையில் தன்னை மீட்க யாரும் வரவில்லையே என வருந்தி உயிரை விட முடிவு செய்தாள். அப்போது அங்கு வந்த அனுமன் நம்பிக்கை வரும் விதத்திலும், அவள் உயிரை தியாகம் செய்வதை தடுக்கும் வகையிலும் ராம நாமத்தை கூறியதோடு, ராம லட்சுமணர் விரைவில் வருவார்கள்” என்றும் அனுமன் தெரிவித்தான். இதைக் கேட்ட சீதை குழப்பம் நீங்கி தெளிவு பெற்றாள்.
இந்த வகையில் முதலாவதாக சீதையை காப்பாற்றியது அனுமன். இரண்டாவதாக ராம லட்சுமணர் போர்க்களத்தில் நாக பாணத்தால் தாக்கப்பட்டு உயிர் போகும் நிலையில் இருந்தனர். அதைக் கண்ட அனுமன் உடனடியாக மூலிகைக்காக சஞ்சீவி மலையே கொண்டு வந்து அவர்களின் உயிரைக் காப்பாற்றினார்.
இதுவரை மூன்று கடவுள்களை காப்பாற்றிய அனுமன் நான்காவதாக பரதனைக் காப்பாற்றினான். 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து அயோத்தியில் ராமர் பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் நந்தி கிராமத்தில் ராம பாதுகைகளை பூஜித்தபடி பரதன் ஆட்சி செய்தான். 14 ஆண்டு முடியும் நிலையில் ராவண வதம் முடிந்ததும், சீதையை மீட்டு புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்பிக் கொண்டு இருந்தார் ராமர்.
அதற்கு முன்னதாக அனுமனை அயோத்திக்குச் சென்று ராமரின் வருகை பற்றி பரதனிடம் சொல்லி விடு. இல்லாவிட்டால் அவன் அவசரப்பட்டு உயிரை விட்டு விடுவான் என அனுமனை கேட்டுக் கொண்டார் ராமர். அப்போதும் அனுமன் விரைந்து சென்று ராமர், சீதை வருகையை தெரிவித்து பரதனின் உயிரைக் காப்பாற்றினார்.
மாணவர்களே... இப்போது புரிகிறதா நான்கு கடவுள்களின் உயிரைக் காத்தவன் அனுமன் என்பதால் தான் சிறிய திருவடி என அழைக்கிறோம் என பேச்சாளர் சொன்ன போது கூட்டத்தில் இருந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் எழுந்தான். ''ஐயா... நீங்கள் சொல்வது தவறு'' என்றான். பேச்சாளர் மட்டுமின்றி பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அனைவரும் திகைத்தனர்.
அந்த சிறுவனை மேடைக்கு அழைத்தார் பேச்சாளர். மைக்கை கொடுத்து அவனுடைய கருத்தை சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். ''சீதை, ராமர், லட்சுமணர், பரதன் ஆகிய நான்கு பேரை மட்டும் அனுமன் காப்பாற்றவில்லை ஐந்தாவதாக கிருஷ்ணகுமாரையும் காப்பாற்றினார்'' என்றான்.
அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ராமாயண காவியத்தில் கிருஷ்ணகுமார் என்றொருவர் இல்லையே என சிந்தித்த நிலையில், ''அந்த கிருஷ்ணகுமார் யார்'' எனக் கேட்டார் பேச்சாளர். ''கிருஷ்ணகுமார் தான் என் தம்பி'' என்றான் சிறுவன்.
''என் தம்பிக்கு மூன்று வயதான போது டெங்கு காய்ச்சல் வந்தது. மருத்துவரின் சிகிச்சை பலன் தராத நிலையில் அப்பா என்னை அழைத்துக் கொண்டு பெருமாள் கோயிலுக்கு சென்று அழுது முறையிட்டார். எங்களிடம் விபரத்தை கேட்ட அர்ச்சகர், ''கவலைப்படாதீர்கள். கஷ்டங்களை அனுமனின் காலடியில் சேர்த்து விட்டு நம்பிக்கையுடன் பத்து நாட்கள் தினமும் காலையில் அனுமன் சன்னதியை 18 முறை சுற்றி வேண்டிக் கொள்ளுங்கள். அனுமன் காப்பாற்றுவான்'' என்றார்.
அதன்படி 10 நாட்கள் அனுமனை வேண்டியபடி தினமும் நாங்கள் சுற்றினோம். கொஞ்சம் கொஞ்சமாக சுகமடைந்த என் தம்பி முழுவதும் குணமாகி விட்டான். நீங்கள் கூறிய நான்கு கடவுள்கள் மட்டுமின்றி என் தம்பியும் சேர்த்து ஐந்து பேரை காப்பாற்றியது அனுமன் தானே ஐயா” என வெள்ளை மனதுடன் சொன்னான் சிறுவன். அங்கிருந்த அனைவரும் பலமாக கை தட்டினர். உடனே பேச்சாளர், “தம்பி... ஐந்து பேரை மட்டுமல்ல உறுதியான பக்தியுடன் வேண்டுவோர் அனைவரையும் அனுமன் காப்பாற்றுவான். அதற்கு உறுதியான பக்தி அவசியம்” என்றார்.

