வாழ்வில் பிரச்னையால் தவித்தான் இளைஞன் ஒருவன். ஞானி ஒருவரைச் சந்தித்து, ''சுவாமி! என் வாழ்வில் எப்போதும் பிரச்னை! நிம்மதியா துாங்க கூட முடியலை! நீங்க தான் வழி காட்டணும்'' என்றான்.
''தம்பி! இன்றிரவு இங்கேயே தங்கு. அதோ! அங்குள்ள தோட்டத்தில் மாடுகள் எத்தனை இருக்குன்னு பார்த்து வா''
'' 20 மாடுகள் இருக்கு சுவாமி''
''நல்லது. உனக்கு சின்ன வேலை தர்றேன். இன்றிரவு மாடுகளை படுக்க வைச்ச பிறகு தான் நீ படுக்கணும். சரியா? காலையில் என்னை வந்து பார்'' என்றார்.
காலையில் களைப்புடன் வந்தான்.
''சுவாமி! ராத்திரி பூராவும் ஒரு நிமிஷம் கண்ணை மூடலை''
''ஏன் என்னாச்சு''
''மாடுகளை படுக்க வைக்க படாதபாடு பட்டேன். தானாகவே சில மாடுகள் படுத்தன.
சில மாட்டுக்கு நான் ரொம்ப மெனக்கெட்டேன். ஆனாலும் எல்லாம் ஒரே நேரத்தில படுக்கலை. சிலது படுத்தால் சிலது எழுந்திடுது'' என சலித்துக் கொண்டான்.
''இது போலத் தான் நமக்கும்! வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளைத் தீர்ப்பது என்பது மாடுகளை படுக்க வைப்பது போன்றது!. சில பிரச்னை தானாக முடிவுக்கு வரும். சிலவற்றை முடிக்க மெனக்கெட வேண்டியிருக்கும். சில பிரச்னை முடிவுக்கு வந்தாலும், வேறொரு பிரச்னையாக உருவெடுக்கும். எல்லாம் தீர்ந்தால் தான் நிம்மதியா படுப்பேன் என்றால் முடிவு தான் ஏது? யாராலும் படுக்க முடியாது. முடிந்ததை தீர்த்து விட்டு, மற்ற பிரச்னைகளை கடவுளிடம் ஒப்படைத்து விடு. நிம்மதியாக துாங்கு'' என்றார்.

