ADDED : ஜூலை 23, 2026 09:19 AM
பாரதப்போரில் அர்ஜூனன் மகனான அபிமன்யுவைக் கொன்றான் ஜயத்ரதன். இவன் துரியோதனனின் தங்கையான துச்சளையின் கணவர். மகனை இழந்த அர்ஜூனன் பழிக்குப்பழியாக ஜயத்ரதனைக் கொல்ல முடிவெடுத்தான். அதை தடுக்க ஆச்சாரியாரான துரோணர் மூன்றடுக்கு வியூகம் அமைத்தார். ஆனால் அதைப் பிளந்து கொண்டு அர்ஜூனன் முன்னேறினான்.
இதைக் கண்ட துரியோதனன் ஆச்சாரியார் உதவியை நாடினான். அவர் அம்பு துளைக்காத கவசம் ஒன்றை அணிவித்து, ''இனி அர்ஜூனனை நீ தைரியமாக எதிர்கொள்ளலாம்'' என்றார்.
துரியோதனன் துணிவுடன் போர்க்களத்தில் இறங்கினான். அர்ஜூனன் விடுத்த அஸ்திரங்கள் அவனை ஒன்றும் செய்யவில்லை.
இதன் பின் துரியோதனனின் உடலில் கவசம் மூடியது போக, எங்கெங்கு இடைவெளி இருக்கிறது என்று அர்ஜூனன் கவனித்தான். அந்த இடங்களை குறி வைத்து சிறிய அம்புகளைத் தொடுத்தான். அவை துரியோதனனுக்கு கடும்வலியை ஏற்படுத்தின. தாக்கு பிடிக்க முடியாமல் போர்க்களத்தை விட்டு ஓடினான். ஒரு செயலை செய்யும் போது பெரும் தடைகள் வரலாம். ஆனால் அதை முடிக்க ஏதோ ஒரு சிறுவழி இருக்கும். அந்த வழியில் சிரமப்பட்டு செயலாற்றினால் வானம் கூட வசப்படும்.
