ADDED : செப் 18, 2026 08:20 AM

மகாருத்ரம் என்ற காட்டில் தேவகர்ப்ப மகரிஷி ஆஸ்ரமம் இருந்தது. அங்குள்ள தோட்டத்தில் துளசி, மந்தாரை, மல்லிகை செடிகள் இருந்தன. சில பசுக்களையும் பராமரித்து வந்தார்.
மங்களகரமான சூழல் நிலவியதால் மகாலட்சுமியின் பார்வை அங்கு விழுந்தது.
போதாக்குறைக்கு விஷ்ணுவுக்கு நைவேத்யம் செய்த பாலையே, உணவாக ஏற்பார் மகரிஷி. இதனால் மகாலட்சுமி, அவரை நேரில் காண ஆஸ்ரமத்திற்கே வந்து விட்டாள்.
“மகரிஷியே! உம் பக்தியை மெச்சுகிறேன். எல்லா செல்வமும் பெற்று வளமுடன் வாழ்வீராக!” என வாழ்த்தினாள்.
“தாயே! துறவிக்கு செல்வம் எதற்கு? பிறப்பற்ற முக்தியே என்னுடைய விருப்பம்” என்றார்.
“முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் நீர் பணக்காரனாக வாழ்ந்தாக வேண்டும். அதன் பின்னரே உமக்கு முக்தி உண்டாகும்” எனச் சொல்லி மறைந்தாள்.
லட்சுமியின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும் என தீர்மானித்த மகரிஷி ஆஸ்ரமத்தை விட்டு கிளம்பினார்.
ஓரிடத்தில் பல்லக்கு, பரிவாரம்,படை வீரர்கள் என பெருங்கூட்டம் இருந்தது. காட்டுக்கு வேட்டையாட வந்த அந்நாட்டின் மன்னர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் ரத்தின கிரீடம் பட்டுத்துணியில் வைக்கப்பட்டிருந்தது.
மகரிஷியின் மனதிற்குள் விபரீத எண்ணம் எழுந்தது.
'கிரீடத்தை காலால் உதைத்தால் மன்னரின் கோபத்திற்கு ஆளாகலாம். அதற்கு தண்டனையாக தன்னைக் கொல்ல மன்னர் உத்தரவிடுவார். அதன் மூலம் மகாலட்சுமியின் ஆசை நிறைவேறாமல் போய் விடும்” என எண்ணினார்.
இதை அறிந்த மகாலட்சுமி, அஷ்ட நாகத்தில் ஒன்றான அனந்தனை அங்கு அனுப்பினாள்.
அனந்தன் ராஜ நாகமாக உருவெடுத்து, கிரீடத்திற்குள் ஒளிந்து கொண்டான்.
மகரிஷி மன்னரை நெருங்கினார்.
கிரீடத்தை காலால் உதைத்தார். வீரர்கள் மகரிஷியைப் பிடிக்க ஓடி வந்தனர். ஆனால், கிரீடத்திற்குள் இருந்த பாம்பு வெளிப்பட்டு புதருக்குள் மறைந்தது.
தங்களைப் பாதுகாப்பதற்கே, கிரீடத்தை மகரிஷி எட்டி உதைத்திருக்கிறார் என தவறாகப் புரிந்து கொண்ட மன்னரும், வீரர்களும், அவர் திருவடியில் விழுந்து நன்றி கூறினர்.
அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்ற மன்னர், மகரிஷியை ராஜ குருவாக ஏற்றார். சகல வசதியுடன் வாழச் செய்தார். கொடுக்க நினைத்து விட்டால் துறவியை கூட தேடி வந்து கோடீஸ்வரனாக வாழச் செய்வாள் மகாலட்சுமி.
