ADDED : நவ 07, 2024 08:47 AM

மாவீரன் பகத்சிங்
ஆன்மிக உணர்வு உள்ளவர்களிடம் நிச்சயம் தேசிய உணர்வு இருக்கும். ஏனென்றால் ஆன்மிக உணர்வே தன்னம்பிக்கையை ஊட்டும். துயரை எதிர்த்து நிற்கும். அது சொந்த துயராகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை; சமுதாயத்திற்கும் பொருந்தும்.
இந்த ஆன்மிக உள்ளம் இல்லாதவர்கள்தான் தேசப் பற்றும் இல்லாதவர்களாகி, 'விடுதலை வேண்டாம், ஆங்கிலேயனே தொடர்ந்து ஆளட்டும்' என கோழைக்கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் சுதந்திர வேட்கையை ஆன்மிக நெறியின் ஓர் அங்கமாகவே கடைபிடித்து வந்த குடும்பத்தில் பிறந்தவரே மாவீரன் பகத் சிங். இவருடைய தந்தையாரும், அஜித் சிங், ஸ்வரண் சிங் ஆகிய இரு மாமன்மார்களும் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி சிறை சென்றவர்கள். இதனால் சிசு பருவத்திலேயே இவருக்கும் தேசியம் ரத்தத்திலேயே ஊறிவிட்டது. இந்நிலையில் 1919ல் ஜாலியன் வாலா பாக் படுகொலை தாக்கத்தை பார்த்தார் பன்னிரண்டு வயது நிரம்பிய பகத் சிங். வீழ்ந்து கிடந்த சடலங்களோடு, பலர் படுகாயமுற்று, முனகிக் கொண்டிருந்த அவலம் அவருடைய இதயத்தில் குருதியைப் பெருக்கியது.
இனி மேலும் மவுனமும், அஹிம்சையும் சரிப்படாது என்பதை உணர்ந்தார் பகத்சிங். தன் எண்ணத்திற்கு ஒத்துப் போகிற இளைஞர்களை திரட்டி, 1926ல் இந்தியாவின் நவீன வீர இளைஞர்கள் (நவ ஜவான் பாரத சபா) அமைப்பை உருவாக்கினார். இதைப் பார்த்த ஆங்கிலேயர் அவரைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர்.
இதற்கிடையில் 1928ம் ஆண்டு லாகூரில் அஹிம்சைவழி அணிவகுப்பைத் தலைமை ஏற்று நடத்திச் சென்ற தியாகி லாலா லஜபதி ராயை காவலர்கள் மூர்க்கமாகத் தாக்கினர். அதனால் நோயுற்ற லஜபதி ராய் அடுத்த மாதமே இறந்தார். இதை அறிந்து கொதித்தெழுந்த பகத் சிங், அந்தக் கொலைக்குக் காரணமான ஜேம்ஸ் ஸ்காட் என்ற அதிகாரியை கொல்ல தீர்மானித்தார். ஆனால் சாண்டர்ஸ் என்பவனை ஜேம்ஸ் என தவறாக நினைத்து சுட்டுக் கொன்றார். இலக்கு இடம் மாறினாலும் இவனும் அழிக்கப்பட வேண்டியவன் தானே? இதற்காக கடவுளுக்கு நன்றி சொன்னார் பகத் சிங்.
ஆனால் விரைவில் அவர் கைது செய்யப்பட்டு மரண தண்டனை என தீர்ப்பாகியது. அப்போது அவருக்கு வயது 24தான். துாக்கிலிடப்படுமுன் நீதிபதி, ''உன் கடைசி ஆசை என்ன'' என நீதிமன்ற சம்பிரதாயப்படி கேட்டார். அதற்கு அவர், ''என்னைத் துாக்கிலிடாதீர்கள்'' என கோரினார். உடனே அனைவரும் 'இவன் என்ன போராளி. பயந்தாங்கொள்ளி' என்ற நோக்கில் சிரித்தனர். ஆனால் பகத் சிங் அதற்கான காரணத்தை சொன்னதும் சிரித்த நபர்கள் அழ ஆரம்பித்தனர். இதோ அவர் கூறியது, 'நான் உயிர் நீக்கும் தருணத்தில், என் உடல் பாரதமாதாவான இந்த பூமியைத் தழுவும் வகையில் வீழ்ந்து கிடக்க விரும்புகிறேன். ஆகவே என்னைச் சுட்டுக் கொன்று விடுங்கள்' என உருக்கமாக கேட்டார். ஆனாலும் துாக்குக் கயிறுதான் இவரது வாழ்க்கையை முடித்தது.
துடிப்பு மிகுந்த ஓர் இளைஞனை தியாகம் செய்ததில், தன் விடுதலைக்கான எழுச்சி வலுப்பெற்றதை மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் பராசக்தியான பாரதமாதா.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695