
காஞ்சிபுரம் மடத்திற்கு வந்தார் நிர்லேகர் என்ற வடஇந்திய பக்தர். அவரை மஹாபெரியவரிடம் அழைத்துச் சென்றார் தொண்டர் ஒருவர். அண்ணாந்து பார்த்த சுவாமிகள், 'இவர் காசி மடத்தைச் சேர்ந்தவராச்சே' என ஆரம்பித்து அவரைப் பற்றிய விபரங்களைச் சொன்னார்.
சுவாமிகள் சொன்னதை எல்லாம் தொண்டர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதைக் கேட்ட நிர்லேகருக்கு பிரமிப்பு ஏற்பட்டது. தன்னிடம் இருந்த போட்டோ ஒன்றை காட்டி, ''இந்த படத்திலுள்ள சரஸ்வதி சிலை மன்னர் போஜராஜனால் பூஜிக்கப்பட்டது. தற்போது இது லண்டனில் உள்ள விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் மியூசியத்தில் உள்ளது. சிறப்பு மிக்க இந்தச் சிலை வெறும் காட்சிப் பொருளாக வெளிநாட்டில் இருப்பது வேதனை தருகிறது. இதைப் போல புதிய சிலை ஒன்றை உருவாக்கி உஜ்ஜயினியில் கோயில் கட்ட ஏற்பாடு செய்துள்ளோம்'' என்றார். சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது.
அதன்பின் மஹாபெரியவர், ''மாளவ பிரதேசத்தை ஆட்சி செய்த புகழ் மிக்க ஹிந்து மன்னர் தான் இந்த போஜராஜன். பரமார வம்சத்தை சேர்ந்த ராஜபுத்திர மன்னர் இவர். 'தார்' என்ற நகரை தலைநகராகக் கொண்டிருந்தார். இதை 'தாரா' என்றும் சொல்வதுண்டு. வடக்கில் சித்தோர்கார் முதல் தெற்கில் கொங்கண் வரையிலும், மேற்கில் சபர்மதி நதி முதல் கிழக்கில் விதிஷா வரையிலும் இவரது நாடு இருந்தது.
கலை, இலக்கியம், அறிவியலில் சிறந்த இவர் கல்வியாளர்களை ஆதரித்தார். போஜசாலா என்ற சமஸ்கிருத கல்வி நிறுவனத்தை நடத்தினார். போஜ்பூர் என்ற நகரை உருவாக்கி அங்கு சிவன் கோயிலை கட்டினார். இவரை நினைவுபடுத்தும் சின்னமாக இக்கோயில் இன்றும் உள்ளது. புதிதாக செய்ய இருக்கும் சரஸ்வதி சிலையை தாராவில் பிரதிஷ்டை செய்யுங்கள்' என விளக்கமாகச் சொன்னார் சுவாமிகள்.
அதைக் கேட்ட நிர்லேகர், 'இப்படி உட்கார்ந்த இடத்தில் போஜராஜன் பற்றி அறியாத ரகசியத்தை எல்லாம் மடை திறந்த வெள்ளம் போல சொல்கிறாரே' என வியந்தார். இப்படி எத்தனையோ நிர்லேகர்களைப் பிரமிக்க வைத்தார். காஞ்சி மஹாபெரியவரின் நாக்கில் இந்த உலகத்தை ஆட்சி செய்யும் பராசக்தி குடியிருக்கிறாள். அவரின் வடிவில் நம்முடன் பேசுபவள் பராசக்தியே.
நினைத்தது நடக்க...
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய துார்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
பக்தி இல்லாதவரால் அடைய முடியாதவனே. தாயின் கருவில் பிறந்தால், பக்தனை காக்க தாமதமாகும் என்பதால் துாணில் வந்தவனே. லட்சுமி நரசிம்மனே உன்னை சரணடைகிறேன்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com

