ADDED : மார் 06, 2025 03:06 PM

கல்வி அருளும் த்விஜ கணபதி
பிரம்மனின் வடிவமாக, ஞானத்தின் வடிவமாக விளங்குபவர் இந்த கணபதி. வலக்கையில் ஜபமாலையும், இடக்கையில் ஓலைச் சுவடியும், பின் வலக்கையில் யோக தண்டமும், பின் இடக்கையில் கமண்டலமும் ஏந்தியவராக, பால் போன்ற நிலவின் நிறத்தில் குளிர்ந்த திருமேனியராகத் தோன்றுகிறார் இந்த கணபதி.
மெய்யறிவைத் தரும் வேதாகம சிறப்புக் கல்விக்கான அனைத்து பொருட்களையும் ஏந்தியபடி, பிரம்மனைப் போல இவர் காட்சியளிப்பதால், பிரம்ம கணபதி என்றும் போற்றப்படுகிறார். இவரே 'பிரம்மணாம் பிரம்மணஸ்பதி' என வேதம் கூறும் குரு வடிவமானவர்.
தியான சுலோகம்
ய: புஸ்தகாக்ஷ குண தண்ட கமண்டலு ஸ்ரீ:-
வித்யோதமாந கரபூஷண மிந்து' வர்ணம் |
ஸ்தம்பேரமாநந சதுஷ்டய சோபமாநம் -
த்வாம் யஸ் ஸ்மரேத் த்விஜ கணாதிபதே ஸ தந்ய: ||
த்விஜ கணாதிபதே - பிரம்மாவின் வடிவமாகத் திகழும் துவிஜ கணபதியே (உம்முடைய)
புத்தகம் - புத்தகம் (இங்கு சுவடியை குறிக்கும்)
அக்ஷகுண - ஜபத்திற்கு உதவும் உருத்திராக்க மாலை
தண்ட - யோக தண்டம்
கமண்டலு - கமண்டலம் இவற்றுடன்
ஸ்ரீ வித்யோதமாந - எழில் மிகுந்து விளங்கும்
கரபூஷணம் - நான்கு கைகளுடனும் ஆபரணங்களுடனும் பிரகாசிப்பவரும்
இந்து வர்ணம் - சந்திரனைப் போன்ற வெண்மை நிறத்தவரும்
ஸ்தம்பேரம - யானையினுடைய
ஆநந சதுஷ்டய - நான்கு திருமுகங்களுடன்
சோபமாநம் - ஒளிர்ந்து பிரகாசிப்பவருமான
த்வாம் - துவிஜ கணபதி எனும் உம்மை
யஸ் - எந்த பக்தன்
ஸ்மரேத் - நினைத்திடுவானோ
ச: - அந்த பக்தன்
த'ந்ய: - கொடுத்து வைத்தவன் (வேண்டிய வரங்களைப் பெறுவான்)
ஜபமாலை, ஓலைச் சுவடி, யோக தண்டம், கமண்டலம்
இவை அனைத்தும் பிரம்மனின் கருவிகள். பிரம்மன் வேதங்களை ரிஷிகளுக்கு அருளியவன். அவனது வடிவமாகவே எழுந்தருளியுள்ளார் இக்கணபதி. நாம் வேதங்களைப் பின்பற்றி அறநெறிகளைப் பயில வேண்டும் என்பதை இத்திருவுருவம் நமக்கு உணர்த்துகிறது.
பலன் - கல்வி, ஞானம், புகழ், செல்வம் கிடைக்கும்
அருள் தொடரும்
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்